Saturday 26 February, 2011

கணக்கெடுப்பா ? புறக்கணிப்பா ?

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று காண்பீர்கள்... புகாரி: 6011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நமது சமுதாய மக்கள் அதிகமாக வெளிநாடு சென்றுப் பொருளீட்டுவதால் அவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் பயனுள்ளதாக அமையப் பெற்ற உணர்வு பத்திரிகையில் குரல் 32 ல் கணக்கெடுப்பா ? புறக்கணிப்பா ? என்றத் தொடரில் வெளியான சகோ: மர்யம் செல்வன் எம்.ஏ அவர்கள் எழுதிய பயனுள்ளக் கட்டுரையைப் பிரசுரிக்கிறோம்.
மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுக்கும் இடப்பெயர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை உணர்வு வாசகர்கள் அறிவார்கள். முஸ்லீம்களைப் பொறுத்தவரை இடப்பெயர்ச்சி என்னும் மக்கள் தொகை மாற்றக்காரணியே (மூன்றாம் காரணி) அவர்களின் எண்ணிக்கையை பாதிக்கும் முக்கிய அம்சமாகும். அவ்வாறு வேலை வாய்ப்பு நோக்கி இடம் பெயர்வோர் கவனிக்க வேண்டிய அமசங்கள் சிலவற்றை இந்த வாரம் பார்க்கலாம்.
சொந்த நாட்டில் இடம் பெயர்வோர் எங்கிருந்தும் எங்கும் செல்வதற்கு நமது நாட்டைப் பொறுத்தவரை எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் இதுவே வெளிநாடு எனும்போது மிகுந்த எச்;சரிக்கையும், கவனமும் தேவை என்பதை நினைவில் கொள்ளவும்.
இடம் பெயர்வதில் முதலிடத்தில் இருக்கும் நம் சமுதாய சகோதரர்களுக்கு தெரியாத செய்திகளையா புதிதாக சொல்லப் போகிறீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது நாம் குறிப்பிட வருவது சமீபத்தில் 'வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகார அமைச்சகம்' வெளியிட்ட விளம்பரம் மற்றும் செய்திக் குறிப்பு ஆகியனப் பற்றியதாகும்.
பெரியப் படிப்பு படித்து 'ஒயிட்காலர்ஜாப்' எனப்படும் நல்ல வேலைக்குச் செல்வோர் ஓரளவு எச்சரிக்கையாகவே உள்ளார்கள். முஸ்லீம் சமுதயாத்தைப் பொறுத்தவரை இத்தகையப் பணிகளை விட உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கே அதிகம் செல்வதால் இந்த அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திகள் இவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும் எனலாம்.
'வெளியிடங்களுக்கு செல்லுங்கள், சட்டப்பூர்வமாக செல்லுங்கள், சந்தோஷமாகயிருங்கள்' என்றத் தலைப்புடன் ஆரம்பிக்கும் அந்த செய்திக்குறிப்பு (மற்றும் விளம்பரம்) பின்வரும் தகவல்களைத் தருகிறது.
உங்களை வேலைக்கு அனுப்புவதாகக் கூறும் உங்கள் ஏஜென்டின் வார்த்தைகளை அப்படியே நம்பி விடாதீர்கள் உங்கள் எஜென்டுகள் PGE எனப்படும் பதிவு சான்றிதழை வைத்திருக்கிறாரா என்பதைக் கவனியுங்கள். இந்த PGE என்பதன் ஆங்கில விரிவாக்கம் Protector General Emigrants ஆகும். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விசாவானது வேலைக்கானதாக (work visa) இருக்க வேண்டும். அது விசிட் விசா, ரூரிஸ்ட விசா என்ற பெயரில் இருக்கக் கூடாது.
குறிப்பாக வீட்டு வேலைக்கு செல்வோர் 30 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இன்ன வேலைகள் தான் உங்களுக்கு வழங்கப்படும் எனும் உத்தரவில் இந்திய தூதரகத்தினரின் ஒப்பம் இருக்க வேண்டும். மேலும் PGE அலுவலகத்திலிருந்து உங்களுக்கும் தடையில்லா (N.O.C) சான்றிதழை ஆள் அனுப்பும் ஏஜென்டானவர் வாங்கித் தந்திருக்க வேண்டும் இச்சான்றிதழை ECR பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கே. இதுவெ ECNR பாஸ்போர்ட் என்றால் அந்த (N.O.C) தேவை இல்லை.
கல்வி அறிவில் மிகவும் பின்தங்கி இருக்கும் நம் சமுதாய ஆண்கள் பெரும்பாலும் ECR பாஸ்போர்ட்கள் தான் வைத்திருப்பார்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.
பட்டதாரிகள் மட்டுமே ECNR பாஸ்போர்ட்கள் எடுக்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு தற்பொழுது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் இருந்தாலே போதும் என மாற்றப்பட்டிருந்தாலும் நம்மவர்களில் பெரும்பாலோர் அதைவிடக் குறைந்த கல்வித் தகுதியுடையோரே அதிகம் வெளிநாடு செல்கிறார்கள் என்பதால் இந்தத் தகவலை குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது.
மிக முக்கியமானதாக வெளிநாடுகளுக்கு புறப்படுவதற்காக நீங்கள் கொண்டு செல்வும் (பாஸ்போர்ட் விசா மற்றும் என்.ஓ.சி உள்ளிட்ட ) அனைத்து ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதிகள் உங்கள் வீட்டில் உங்களது குடும்பத்தவர்களிடம் கொடுத்து விட்டே செல்ல வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
மேலும் இந்த விஷயத்தில் கூடுதல் தகவல் பெறவும், வெளிநாடுகளில் ஏதேனும் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டால் தொடர்பு கொள்வதற்கும் உள்நாட்டில் உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவுப் பெறுவதற்கும் இந்த அமைச்சகத்தின் இணையதளம் மற்றும் மினனஞ்சல் முகவரிப் போன்றவற்றிற்கு கீழ் உள்ள முகவரியைக் காண்க. 6762483

ஓவர்சீஸ் ஒர்க்கர்ஸ் ரிசோர்ஸ் சென்டர்,
உலகின் எந்த ஒரு இடத்திலிருந்தும் தொடர்பு கொள்ள + 91-11-40503090
'வெளிநாடு வாழ் இற்தியர்கள் விவகார அமைச்சகம்'
இனையதள முகவரி www.moia.nic.in
Email: info@moia.nic.in
கட்டணமில்லா தெலைபேசி எண்: 1800 11 3090


- மர்யம் செல்வன் எம்.ஏ.

Sunday 20 February, 2011

இந்தப்படை போதுமா?. இன்னும்கொஞ்சம் வேணுமா?

முஸ்லிம்களின் “ நமக்குநாமே எதிரி” திட்டம்!.

தமிழக தேர்தலும் கழகங்களும் ஜமாத்களும் ஓர் பார்வை!.
இந்தப்படை போதுமா?. இன்னும்கொஞ்சம் வேணுமா?

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதினால் தேர்தல் வேலைகளும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் வேலைகளும் மும்முரமாக உள்ளன. கட்சிகள் சீட்டிற்காக அணிமாறும் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்து விட்டன. இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் களத்தின் வேலைகளையும் தொடங்க ஆரம்பித்து விட்டனர். த.மு.மு.க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அ.தி.மு.க வுடனும் முஸ்லிம் லீக் தி.மு.க வுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒன்றோ அல்லது இரண்டோ சீட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டு திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம்!. அல்லது தங்களின் சின்னத்தில் போட்டியிடலாம்!. இது இக்கட்சிக்கு ஆரோக்கியமான வளர்ச்சியல்ல!. முழுகட்சியையும் அது திமுக விடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன!.

இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்பது அல்லது பத்து என்று சீட்டுகளை பேரம்பேசி வாங்குவதும், பா.ம.க போன்ற கட்சிகள் எல்லாம் முப்பது சீட்டுக்களை பேரம்பேசி (டிமான்ட்வைத்து) வாங்கும் அளவிற்கு குறுகிய காலங்களில் அசூர வளர்ச்சியடைந்து விட்டார்கள்!. ஆனால் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இருந்து வரும் முஸ்லிம்லீக் கட்சி, தன் பிறை சின்னத்தின் மறுபக்கமான “தேய்பிறையாகவே” இருந்து வருகின்றது!. முன்பு தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியாக இருந்த ஒரு மாபெரும் கட்சி இன்று, பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு அதிலும் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தன்மானத்தை இழந்து நிற்கின்றது. சமீபத்தில் கூட நடைபெற்ற முஸ்லிம்லீக் கட்சி நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தினை கண்டால், நமக்கே பிரமிப்பாக இருக்கின்றது.! இவ்வளவு செல்வாக்கை வைத்துகொண்டு இக்கட்சி ஏன் மேலும் மேலும் வளர்ச்சிபெற முடியாமல் திணறுகின்றது என்று நம்மால் கணிக்க முடியவில்லை!.
மேலும் மனிதநேய மக்கள் கட்சி சுமார் பதினேழு தொகுதிகளில் தங்களுக்கு வெற்றிபெறும் அளவிற்கு செல்வாக்கு உள்ளதாக கண்டறிந்து பொதுக்குழுவில் அந்த தொகுதியையும் அறிவித்தனர். இருந்தும் இவர்கள் மூன்று முதல் ஐந்து சீட்டுகளை மட்டுமே பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எத்தனை எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் வந்தாலும் இன்னும் ஒன்றிற்கும் இரண்டிற்கும் அல்லது ஏதோவொரு குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றினாலே, “சமுதாய ஓட்டு அத்துனையும் உங்களுக்கே” என்று பேரம் பேசி, சமுதாயத்தினை அடகுவைக்கும் அவலநிலை மாறவேண்டும்!. நம்மின் பலத்தினை நாமே கேவலமாக எடைபோடுவதும் சரியல்ல!.
இந்திய தவ்ஹீது ஜமாத்தும் போட்டியிடப் போவதாக தெரியவில்லை!. ஆனால் ஆதரவை, அல்லது பிரச்சாரத்தினை மட்டும் இவர்கள் செய்வார்கள் என்றே தோன்றுகின்றது. நிச்சயமாக த.த.ஜ அணிக்கு மாற்றமான அணியில் இவர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!. இப்படியே நாம் இக்கரைக்கு அக்கறை என்று முடிவெடுப்பதிலேயே அணைத்து இயக்கங்களும் தங்களை முன்னிலைப் படுத்துகின்றன.
மேலும் மானம் காக்குமா ம.ம.க?. என்று ஒருபுறம் இக்கட்சியை 18 சீட்டுகள் பெறவேண்டும் என்று தூண்டுவதும், பின் சேலத்தில் நடைபெற்ற த.த.ஜ பொதுக்குழுவில் ம.ம.க எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் என்று சீண்டுவதும், மாறுவேடம் போடுவதும் சமுதாய இயக்கமான த.த.ஜ விற்கு அழகல்ல!. ஒன்று இவர்கள் போட்டியிடவேண்டும்!. இல்லையென்றால் களத்தில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அமைதியாக இருந்துவிட்டு செல்லவேண்டும். த.த.ஜ – தமுமுக விற்க்கு இடையே உள்ள ஈகோ மற்றும் பொறாமை காரணமாக சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்வதற்க்கு ஆயிரமாயிரம் காரணம் கூறினாலும், இன்று நமக்கு உள்ள அரசியல் அதிகார தேவைக்கு அது உதவாது!. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கவே செய்யும்!.
முஸ்லிம் லீக் நின்றாலும் பிடிக்காது. ம.ம.க நின்றாலும் பிடிக்காது. ஆனால் நாங்களும் நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது எந்தவகையில் நியாயம் என்று சமுதாய நலனை முன்னிலைப் படுத்தும் த.த.ஜ சிந்திக்கவேண்டும். உங்களுக்கிடையே உள்ள ஈகோவை எல்லாம் தேர்தலில் காண்பித்து நம் சமுதாயத்தின் பிரதி நிதித்துவத்தினை அடைய விடாமல் தடுப்பதை சிந்திக்கவேண்டும். அல்லது தேர்தலில் நாங்கள் நிற்கமாட்டோம் என்ற நிலைபாட்டில் இருந்து மாறி, தேர்தல் களம் கண்டு, முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டமன்றம் சென்று, நம் சமுதாய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதுதான் ஒரு சிறந்த இயக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும். அரசியல் வேண்டாம் என்றால் தேர்தலில் பிரச்சாரமும் செயக்கூடாது!. எந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளையும் சந்திக்கக்கூடாது!.
மேலும் ஜமாத், இயக்கம் போன்ற அடைமொழிகளுடன் சிறிய சிறிய பத்துக்கும் மேற்பட்ட இன்னபிற இஸ்லாமிய இயக்கங்களும் அவர்கள் மனதிற்கு என்ன தோன்றியதோ, அதையே ஆதாரமாக வைத்து பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தல் வேலைகள் செய்வதும் ஆரோக்கிய மானதல்ல!.
இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றினைந்தாலே திமுக. அதிமுக காங்கிரஸ் என்று ஏதாவதொரு பெரிய அரசியல் கட்சியுடன் நாமும் முப்பது அல்லது நாற்பது தொகுதிகள் என்று பேரம்பேசி அதை இஸ்லாமிய இயக்கங்களுக்குள் பகிர்ந்துகொள்ளலாம். இது சாத்தியமா என்றால் ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட நம்மால் சாத்தியமே!. இதுபோன்ற ஒரு முடிவை நாம் எட்டாதவரை இன்னும் பத்து தேர்தல்கள் வந்தாலும், இரண்டு மூன்று என்று மட்டுமே முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சட்டமன்றத்தில் காணலாம். மேலும் தேர்தல் முடிந்தபிறகு ஆஹா பார்த்தீர்களா?. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம்!. ஒரு அமைச்சர் கூட இல்லை!. இஸ்லாமியர்களின் நிலையை முன்னேற்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என்று போராட்டம் செய்து என்ன பயன்?.
தேசிய அளவிலும் நம்மை வழிநடத்த ஒரு வலிமையான இஸ்லாமிய இயக்கமோ அரசியல் கட்சியோ இல்லை!. அதற்கு முதலில் மாநிலம் தழுவிய அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் முதலில் மாநில அளவில் ஒன்றினைய வேண்டும்!. பின் ஒன்றிணைந்த இக்கட்சிகள் தேசிய அளவில் பாராளுமன்ற தேர்தலில் ஒரணியில் நின்றால், எம்பி தொகுதியையும் நம் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பெறமுடியும். ஆனால் செய்வார்களா?. இதுவே நம் அரசியல் உரிமையை பெற சரியான வழிமுறையாக இருக்க முடியும். முஸ்லிம்களின் ஓரணி என்ற கோட்பாடே நம் அரசியல் தீர்வுக்கு வழிவகையாகும். பின் நமக்கு சச்சார் கமிட்டியும் தேவை இல்லை!. சாச்சா கமிட்டியும் தேவை இல்லை!. நம்மை நாமே மாற்றிக்கொள்ளாத வரை நமக்கு எந்த அரசியல் கட்சியும் உரிமையை வழங்க முன்வராது!.
கடந்த தேர்தலில் கூட அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் சென்னையில் ஒன்று கூடி ஒரே கூட்டணியில் நிற்பது என்று முடிவெடுத்து கடைசியில் ஆளுக்கொரு திசையில் வழக்கம்போலவே சென்றுவிட்டனர். ஆக அரசியியலில் நமக்கு எதிரிகள் வேறு யாரும் அல்ல! நமக்கு நாமே எதிரிகள்!!.

முஸ்லிம் சமுதாயத்தின் ஜமாத்/லீக்/கழகம்/பேரவை மற்றும் இத்யாதிகள்:
1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2. இந்திய தேசியலீக்

3. தேசியலீக் கட்சி
4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்)
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக்(ஷேக் தாவூத்)
6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான்
7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன்)
8. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்
11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்

12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம்
13. மனிதநேய மக்கள் கட்சி
14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (பாலை ரபீக்)
15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்) 16. ஜனநாயக மக்கள் கட்சி
17. இந்திய தேசிய மக்கள் கட்சி
18. இந்திய தேசிய மக்கள் கட்சி (குத்புதீன் ஐபக்)
19. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்
20. இந்திய தவ்ஹீது ஜமாத்
21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் (இணையதளம்)
23. ஜமாத் இ இஸ்லாமி
24. ஜமாத்துல் உலமா
25. ஷரியத் பாதுகாப்பு பேரவை
26. இஸ்லாமிய இலக்கிய பேரவை
27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா 29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி (சித்தீக்)
30. மில்லி கவுன்ஸில்
31. மஜ்லிஸே முஷாவரத்
32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்
33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்
34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்
35. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி)
36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்
37. சிறுபான்மை புரட்சி இயக்கம் (லியாகத்அலிக்கான்)
38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை (ஷேஹூ அப்துல்லாஹ் ஜமாலி)

இயக்கத்திற்கு மட்டும் குறையில்லை!. மற்றும் இங்கு குறிப்பிட மறந்து விட்டது பத்திற்கு மேல் இருக்கும்!. இந்தியா முழுமைக்கும் உள்ள நம் எதிரி இயக்கங்களின் எண்ணிக்கை இதில் பாதி கூட இல்லை!. ஆனால் தமிழ்நாட்டளவில் மட்டும் நாம் கண்ட அமைப்புகளின் என்னிக்கையை கண்டீர்களா?.
இந்திய மக்கள் தொகையைப்போல் எண்ணிக்கையில் அதிகமாகவே உள்ளது நம் இயக்கங்கள்!. ஆனால் ஊட்டச்சத்து இல்லாமல்தான் சவளைப் பிள்ளையாக நாம் இருக்கின்றோம். முதலில் இந்த சமுதாய இயக்கத்திற்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் நிலைதான் தற்போது உள்ளது. எனவே சிந்திப்பார்களா!. இவர்கள் ஒன்றினைந்து என்கட்டுரையை பொய்ப்பிப்பார்களா?.

நன்றி: