Thursday 8 September, 2011

சொல்ல மறந்த கதை

சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு எதிராக களமிறங்கிவிட்டனர்.

காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர்; இலங்கைப் பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல் கக்குகின்றனர்.இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர்? முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை.இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், வீதியில் இறங்கிப் போராடி, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செகின்றனர். ஆனால், கொலை நடந்த கொஞ்ச நாளில், இதே நால்வருக்காக வழக்கறிஞர்கள் கூட ஆஜராக மறுத்தது, இவர்களுக்குத் தெரியுமா? அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே, வழக்கறிஞர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறந்துவிட முடியுமா?

இதிலிருந்து என்ன தெரிகிறது? இவையெல்லாம் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டங்கள். சிந்தித்து, விஷயத்தின் வீரியத்தைச் சீர்தூக்கிப் பார்த்து நடத்தப்படுபவை அல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தமிழர்கள் என ஒரு கோஷ்டி கோஷம் போடுகிறது. ராஜிவோடு இறந்தவர்கள் மட்டுமென்ன, சிங்களவர்களா? இப்படி குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்காமல், ஒவ்வொருவருக்கும் ஜாதி, மத, இன அடையாளங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஒருத்தரையும் தண்டிக்க முடியாது.ஆட்டோ சங்கர் கூட தமிழன் தான். ஏன், "வீரப்பர்' கூட, திடீரென தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். தமிழர் என்பதற்காக முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுவித்தால், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று இளம்பிஞ்சுகளை நெருப்பில் பொசுக்கிய நெடுஞ்செழியன், முனியப்பன், மாது ஆகிய மூவரும் கூட தமிழர்கள் தான். ராமதாசைக் கேட்டால், "அவர்கள் வன்னிய சொந்தங்கள்' என, இன்னும் நெருக்கம் காட்டுவார். அவர்களையும் விடுவித்துவிட வேண்டியது தானா?

தமிழர்களுக்காக ஒரு குழு, சீக்கியர்களுக்காக ஒரு குழு, தெலுங்கர்களுக்காக ஒரு குழுவெனக் கிளம்பிக் கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டம் எதற்கு, காவல் துறை எதற்கு, நீதிமன்றங்கள் எதற்கு? அத்தனையையும் கலைத்துவிட்டு, வலுவான குழு சொல்வதே வேதாந்தம் என்றாக்கிவிட வேண்டியது தானே."குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவைப் பரிசீலிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுவிட்டது; இது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது; நியாயமற்றது' என, சட்டத்தைக் கரைத்துக் குடித்த ராம் ஜெத்மலானி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். மூவர் தரப்பிலும் வாதாடிய வழக்கறிஞர்கள் வைத்த வாதம், காலதாமதம் மட்டுமே.

இதே 11 ஆண்டுகள் நான்கு மாத தாமதத்தோடு, "உங்கள் கருணை மனு ஏற்கப்படுகிறது; நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள்' என ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தால், "அதெல்லாம் கிடையாது; நீங்கள் ரொம்ப தாமதமாக முடிவெடுத்துவிட்டீர்கள்; நாங்கள் சிறையில் தான் இருப்போம்' என, சொல்லியிருப்பார்களா?கருணை மனுவை பரிசீலிப்பதற்கு கவர்னருக்கோ, ஜனாதிபதிக்கோ காலக்கெடு எதுவும் சட்டத்தில் விதிக்கப்படவில்லை. சீக்கிரமாக பரிசீலிக்கச் சொல்லி கேட்டுக்கொள்ளலாம்; அவ்வளவே. கேபினட்டை யாரும் நிர்பந்திக்க முடியாது.காலாகாலத்தில் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் தான் வலியுறுத்தி வருகின்றன. அதே நீதிமன்றங்களில் கூட, 25 ஆண்டுக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் இருப்பதை மறந்துவிடுவதற்கில்லை.உணர்ச்சிகளின் உந்துதலில் தீர்ப்புகள் திருத்தப்படுமானால், குற்றங்களின் எண்ணிக்கை ஒருக்காலும் குறையப்போவதில்லை!

அரசியல்வாதிகளின் போட்டா போட்டி!மூவரின் மரண தண்டனையை மாற்ற வேண்டும் என்பதில், அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் போட்டா போட்டி அலாதியானது. இதற்காகவே கட்சி நடத்தும் வைகோ, ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் மற்றும் சீமான் போன்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. எந்தப் பிரச்னை பற்றி எரியுமோ, அந்தப் பிரச்னை மீது, முடிந்த வரை எண்ணெய் ஊற்றுவர். தீர ஆராய்ந்து உண்மையை உணரும் நோக்கமில்லாமல், செங்கொடிக்கு சிலை வைக்கும் வரை சென்றுவிட்ட பிறகு, சொல்வதற்கு எதுவும் இல்லை.தமிழ், தமிழர் பற்றிய அரசியல் எனும்போது, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பங்களிப்பு இல்லாமல் எப்படி? "ஆயுள் முழுவதும் தங்கள் தவறை எண்ணி வருந்தும் விதமாகத் தான் தண்டனை இருக்க வேண்டும்; அதனால், மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்' என, முதல் நாள், கருணை மனு விடுத்தார்.மறுநாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அ.தி.மு.க., அந்தப் பெயரைத் தட்டிச் சென்றுவிடுமோ என்றஞ்சி, "அவர்கள் மூவரையும் விடுதலையே செய்துவிட வேண்டும்' என, ஒரே போடாக போட்டுவிட்டார். தூக்குக் கயிறை எதிர்நோக்கியிருக்கும் முருகன் கூட இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை.கொண்ட கொள்கையில் உடும்புப் பிடியாக இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட சலனப்பட்டுவிட்டது அதிசயம் தான். முதல் நாள், "எனக்கெல்லாம் அந்த அதிகாரம் கிடையாது' என்றவர், மறுநாளே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.காங்கிரசின் பெயரைச் சொல்லி, அதன் கொடி நிறத்திலேயே, "சேனல்' நடத்துபவர்கள் கூட, இந்தப் பிரச்னையில் தலையிடவில்லை. ராஜிவ் கொலையை நினைவுபடுத்துவதை விட, "ராத்திரி நேரத்து பூஜையில்' பாணி பாடல்கள் தான் கல்லா கட்ட உதவும் என தீர்மானித்துவிட்டனர் போல. எல்லாம் ஓட்டு படுத்தும் பாடு. ஆனால், இது ஓட்டாக மாறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.ஏனெனில், நான்கு பேர் கூடி நின்று கோஷம் போடுவதெல்லாம், மக்கள் கருத்தாகிவிடாது என்பதற்கு, கடந்த தேர்தல் முடிவுகளே சாட்சி.

ராஜிவுடன் இறந்தவர்கள் எத்தனை பேர்?கடந்த 1991ம் ஆண்டு, மே 21 இரவு, 10 மணி 18 நிமிடங்களில் வெடித்தது அந்த மனித வெடிகுண்டு. அதில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் குழப்பம் தொடர்கிறது; காரணம் சுலபமானது. இறந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தினால், குழப்பம் தீர்ந்துவிடும்.மனித வெடிகுண்டின் இலக்கு ராஜிவ். அவரோடு இறந்த ஒரே அரசியல்வாதி லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகர். இவர்கள் தவிர, ராஜிவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி பி.கே.குப்தா, எஸ்.பி., முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப், சப் - இன்ஸ்பெக்டர் எத்திராஜு, கான்ஸ்டபிள்கள் முருகன், தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன் என ஒன்பது பேர் பலியாகினர். இவர்களைத் தவிர, லதா கண்ணன், கோகிலவாணி, சந்தானி பேகம், சரோஜாதேவி, டேனியல் பீட்டர் என மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இவர்கள், லதா கண்ணனின் தலைமையில், காங்கிரஸ் பிரமுகர் மரகதம் சந்திரசேகருக்காக பணியாற்ற வந்தவர்கள்.மேற்சொன்ன ஐந்து பேர் தவிர, மனித வெடிகுண்டான தானுவும், அவர்களால் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட அரிபாபுவும் உயிரிழந்தனர். ஆக மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 18. இவர்களில் அப்பாவிகள் 16 பேர்; சதித் திட்டத்தில் பங்கு பெற்றவர்கள் இருவர்.

மரண தண்டனையும், மனிதநேயமும்:"இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், 21-ம் நூற்றாண்டைப் போன்ற நாகரிக காலத்தில் மரண தண்டனை என்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனம்' என்பது, கொலையாளிகளுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளவர்களின் வாதம்.கூர்ந்து கவனித்தால் தான் தெரியும், இவர்களது நோக்கம் மரண தண்டனையை ரத்து செய்வது அல்ல; இந்த மூவரை மட்டும் விடுவிப்பது தான் என்று. ஒருவேளை, அவர்களது வாதம், ஒட்டுமொத்த மரண தண்டனைக்கே எதிரானது தான் என்றால், பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும், மும்பையைச் சிதறடித்த அஜ்மல் கசாப்புக்கும் கூட மரண தண்டனை கூடாது என்பார்களா?

இந்தக் கேள்வியை, ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, பகிரங்கமாகவே கேட்டுவிட்டார். மரண தண்டனைக்கு எதிராக சண்டமாருதம் செய்தவர்கள் யாரும் சத்தமே காட்டவில்லை. இப்படி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனையை ரத்து செய்து கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்காது; சட்டாம்பிள்ளைகளின் ஆட்சி தான் நடக்கும். உண்மையான காட்டாட்சியை அப்போது தான் காணமுடியும்.

மரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என்கிறபோதே அஞ்சாமல், படுபாதகச் செயல்களைச் செய்யத் தயங்காதவர்கள், அதை ரத்தும் செய்துவிட்டால், நெஞ்சுரம் கொண்டுவிட மாட்டார்களா? எந்த அட்டூழியத்தையும் செய்யத் துணிந்துவிட மாட்டார்களா?"உலகின் 130 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது; 80 நாடுகளில் மரண தண்டனை இருந்தாலும், அது நிறைவேற்றப்படுவதில்லை' என, புதிதாக முளைத்த சில, "புத்தர்கள்' புள்ளிவிவரம் அளிக்கின்றனர். அதன் பிறகு, அந்த, 210 நாடுகளிலும் கொலைகள் நடப்பதில்லையா, கற்பழிப்புகள் குறைந்துவிட்டனவா, மக்கள் ஞானமடைந்துவிட்டனரா என்பன போன்ற கேள்விகளுக்கு, இவர்கள் பதில் அளிப்பதில்லை.

இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எல்லா கொலைக் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவதில்லை. அரிதினும் அரிதான வழக்குகளிலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்று வீசியது, அரிதான வழக்கில்லை எனில், வேறென்ன? தவறு செய்பவர்களே இல்லாத நாட்டுக்கு தண்டனைகள் தேவையில்லை; பிஞ்சுக் குழந்தை என்று கூட பார்க்காத காமுகர்களுக்கும், காது தோட்டுக்காக கழுத்தையே அறுக்கும் கிராதகர்களுக்கும், குடிபோதையில் உயிர் பறிக்கும் கொலைகாரர்களுக்கும், குருவியைச் சுடுவது போல சுட்டுத்தள்ளும் கசாப்களுக்கும், மரண தண்டனை அன்றி, வேறென்ன தண்டனை தருவது? அவர்கள் வாதத்துக்கே வருவோம்... பயங்கரவாதிகளைப் பழிவாங்குவதாகச் சொல்லி, ஒட்டுமொத்த இனத்தையே கொன்று குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளாரே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே; ஒருவேளை, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சர்வதேச நீதிமன்றம், ஆறு மாத சிறைத் தண்டனையும், 600 ரூபாய் அபராதமும் விதித்தால், இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நடுரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என கொக்கரிக்க மாட்டார்களா?

தண்டனைக்கு உள்ளானவர்களை, மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று ஒரு தரப்பு கொடி பிடிக்கத் துவங்கியுள்ளது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ, போதையின் பிடியிலோ இல்லாமல், நன்கு திட்டமிட்டு, ஒரு முறைக்கு இரு முறை ஒத்திகை பார்த்து நடத்தப்பட்டது தான் ராஜிவ் படுகொலை. இறந்தது அவர் மட்டுமல்ல; அவரது தொண்டர்கள்; பாதுகாப்புக்கு நின்றவர்கள் என மேலும் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு குடும்பம், குட்டி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா யாரும் இல்லையா? அவர்களுக்கு மட்டும் மனிதாபிமானம் காட்டப்பட்டிருக்க வேண்டாமா? இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டே போனால், அவற்றுக்கு ஒருக்காலும் தீர்வு கிடைக்காது. ஒரே வரியில் சொல்வதானால், மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே காட்டப்பட வேண்டியது!

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்: ராஜிவுடன் கொலையுண்ட ஒரே அரசியல்வாதி, லீக் முனுசாமி, 65, காங்கிரசின் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவான தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் லீகின் பொதுச் செயலராக இருந்தவர். அதனாலேயே லீக் முனுசாமி என்றழைக்கப்பட்டவர். இவரது மகன் , 61, இன்றளவும் தந்தையின் பட்டத்தையும், துக்கத்தையும் சுமந்துகொண்டு இருக்கிறார்.

சம்பவம் நடந்தபோது ஏற்பட்ட சோகத்தையும், தற்போதைய நிகழ்வுகளையும் பற்றி அவர் கூறியதாவது:ராஜிவ் கொல்லப்பட்ட அதே இரவில், மயிலை மாங்கொல்லையில் ஒரு பொதுக்கூட்டத்தில் இருந்தேன். தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்த, குடும்பத் தோழி ஒருவர், எங்கள் வீட்டுக்கு போன் செய்து, "ராஜிவ் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன; உங்கள் தந்தை எங்கே?' என விசாரித்தார்.தேர்தல் பணிக்காக, எங்கள் தந்தை ஒரு வாரமாக அங்கே தான் முகாமிட்டிருந்தார். பதறியடித்து, போளூர் வரதன் வீட்டுக்குச் சென்றோம். அவர், உண்மையைச் சொல்லத் தயங்கி, "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்றார்.எந்த மருத்துவமனை எனத் தெரியவில்லை. சாலையெங்கும் நெருப்புக் கோளம். திரும்பிய இடமெல்லாம் கலவரக் காட்சி. அரை கிலோ மீட்டர் தூரம் கடக்க, அரை மணி நேரம். காரின் முகப்பில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., கொடிகளைக் கட்டி, அப்பல்லோ, அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் என, அந்த நள்ளிரவு நேரத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடினோம்.அதிகாலை 3 மணிக்கு, வீட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. "வானொலியில், ராஜிவோடு இறந்தவர்களின் பட்டியலில், முனுசாமி என்ற பெயரையும் சொல்கின்றனர். அது நம் தந்தையாக இருக்குமோ' என, கதறினர்.

அப்படியே ஸ்ரீபெரும்புதூருக்குத் திருப்பினோம். அங்கிருந்த ஒரு போலீஸ் அதிகாரி, உள்ளூர் மருத்துவமனையில் தந்தையின் உடல் - ஆம், உடல் - இருப்பதாகக் கூறினார். தந்தையைப் பார்த்ததும், வெடித்துப் பிளிறினோம். கை துண்டாகியிருந்தது. வயிறு கிழிந்திருந்தது. "ஒருவன் கூட உயிர் பிழைக்கக் கூடாது; பிழைத்தவனும் ஒழுங்காக நடமாடக் கூடாது' என்ற நோக்கத்தில், வெடிகுண்டில், ஆணிகளைச் செருகியிருப்பர் போல. தந்தையின் உடலெங்கும் இரும்புத் துகள்கள் துளைத்திருந்தன. ஒவ்வொன்றாய் அகற்ற அகற்ற, பச்சை ரத்தம் பாய்ந்தது. எங்கள் குடும்பத்துக்கு முகவரியாய், முழுமதியாய் இருந்தவர் அப்பா தான். மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என, அவருக்கு ஆறு பிள்ளைகள். இருவருக்குத் தான் திருமணமாகியிருந்தது. இன்னும் நாலு பேரை கரையேற்ற வேண்டியிருந்த நேரத்தில், இந்த சதிக்கு இரையானார். இப்படி எத்தனையோ குடும்பங்கள்; எத்தனையோ துயரங்கள். அத்தனையையும் மறந்துவிட்டு, திடீரென கிளம்பியிருக்கிறது மனிதாபிமான கோஷம். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம், நியாயம் கிடைத்திருக்கிறது என நினைத்திருந்த நேரத்தில், அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது. தமிழக வரலாற்றில் ஆறாத வடுவாய்ப் போன ராஜிவ் கொலை வழக்கை, இம்மண்ணின் மக்களால் ஒருக்காலும் மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது. உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்துவிட்டவர்களுக்கோ, அடிதடி முற்றி மரணம் ஏற்பட்டிருந்தாலோ மன்னிப்பு வழங்கலாம். இது, திட்டமிட்ட படுகொலை. பிரதமர் வி.பி.சிங் கூட்டத்திலேயே ஒத்திகை பார்க்கப்பட்ட படுபாதகம். அன்னிய நாட்டு சதியோடு நடந்த கொடூரம்.

ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்றவர்களை, சாதாரண கொலையாளிகளோடு கூட ஒப்பிடக் கூடாது. சட்டம் எல்லாருக்கும் சமம் என்று சொல்லிவிட்டு, இவர்களை மட்டும் மன்னிப்பது நியாயமில்லை. அப்படியானால், ராஜாவையும், கனிமொழியையும், கல்மாடியையும் கைது செய்வது எதற்காக? ஊழல் செய்தவர்களுக்கே தண்டனை எனும்போது, உயிரைக் குடித்தவர்களை எப்படி விட்டுவைக்கலாம்?தமிழக முதல்வருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்... 1991க்கு முன்பு இருந்ததைப் போல, தமிழகத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கூட்டம், பல பெயர்களில், பல போர்வையில் புற்றீசல் போல முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவற்றை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், தேசத் தலைவர்களின் இழப்பைத் தடுக்கவே முடியாது போகும். இவ்வாறு குமுறி முடித்தார், லீக் மோகன்.

அதே சம்பவத்தில் பலியான இன்னொருவர், இளையான்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட எஸ்.பி., முகமது இக்பால். அவரது மகன் ஜாவித் இக்பாலுக்கும் ஆவேசம் அடங்கவில்லை.

"தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாம். நாங்கள் மட்டுமென்ன ஜப்பானியர்களா? இவர்கள் கொலை பண்ணிக்கொண்டே இருப்பர்; நாம் மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?""எங்கள் தந்தைமார்களை இழந்து, நாங்கள் அனாதையாக நடுத்தெருவில் நின்றோமே. எங்களுக்கெல்லாம் குடும்பம், குட்டி இல்லையா? முருகனுக்கும், சாந்தனுக்கும் மட்டும் தான் இருக்கிறதா?" "இந்தக் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்காதது தான் நாங்கள் செய்த குற்றமா?'' என கொதித்தெழுந்தவர், வீட்டுக்கு அழைத்துச் செல்லத் தயங்கினார்." "அப்பாவின் மரணம் பற்றி பேசினாலே அம்மா கதறத் தொடங்கிவிடுகிறார்,'' என காரணம் சொன்னார். ""எங்கள் குடும்பத்துக்கு நடந்த, "துன்பியல் சம்பவம்' கொலையாளிகள் குடும்பத்துக்கு ஏன் நடக்கக் கூடாது?'' என, அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

நன்றி
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295

Wednesday 7 September, 2011

பற்றாக்குறை பட்ஜெட் தவறல்ல!!


நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், அவருடைய கவலை விலைவாசி உயர்ந்தது குறித்தோ, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவது குறித்தோ, நடுத்தர வர்க்கமும் ஏழை எளிய மக்களும் அன்றாடச் செலவுகளையே சமாளிக்க முடியாமல் திண்டாடி வருவது குறித்தோ இருந்தால் அது நியாயம்.

மாறாக, அவருடைய கவலையெல்லாம் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை உயரும் அளவுக்கு இந்தியாவில் விலையை உயர்த்த முடியவில்லையே என்றும் கெரசின், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் உணவு தானியங்களின் சாகுபடிக்கும், விவசாயத்துக்குப் பயன்படும் உரங்களுக்குமான மானியச்செலவு அதிகமாகிக் கொண்டே போகிறதே என்று இருக்கும்போது நாமும் கவலைப்படுகிறோம், நம்மைப் பற்றிச் சிந்திக்க யாருமே இல்லையா என்று.

மத்திய அரசின் வருவாயைவிட செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது, பற்றாக்குறை அளவு பெரிதாகிக்கொண்டே வருகிறது என்பதால் சில சிக்கன நடவடிக்கைகளை கண்டிப்புடன் எடுக்கத் தொடங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார் அவர்.

அந்த நடவடிக்கைகள் என்னவென்றால் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன, வீண் செலவுகள் செய்யக்கூடாது என்று எல்லா அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது, புதிதாக கார்கள், ஜீப்புகள், வேன்கள் வாங்க வேண்டாம் என்று எல்லா துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன; 5 நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்குகள், சந்திப்புகள், துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இவற்றையெல்லாம் எந்தத் தடையுமின்றி இவர்கள் செய்துவந்தார்கள், இப்போதுதான் நிறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்று இதிலிருந்து புலனாகிறது. இப்போதாவது நல்ல புத்தி வந்து நிலைமை தெரிந்து செயல்பட முடிவெடுத்திருக்கிறார்களே, அதுவரை மகிழ்ச்சி.

இந்தக் கட்டுப்பாடுகளும் சிக்கன நடவடிக்கைகளும் வெறும் கண் துடைப்புதான் என்பதைக் குழந்தைகூடச் சொல்லிவிடும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது வீரர்கள் பயன்படுத்துவதற்காக குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், கட்டில்கள், சேர்கள், நாற்காலிகள், கூடாரத் துணிகள், உடற்பயிற்சிக் கருவிகள் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்த தொகையையும் விலைக்கு வாங்கிய தொகையையும் படிக்கப்படிக்க ரத்தம் கொதிக்கிறது. அதே பொறுப்பற்ற தன்மை அரசின் அன்றாட நிர்வாகத்திலும் குறைவறவே நிலவுகிறது. இந்த அளவுக்கு ஊதாரித்தனத்தையும் ஊழலையும் அனுமதித்துவிட்டு சிக்கன நடவடிக்கைகள் குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிப்பளுவுக்கு ஏற்ப இரண்டாவது, மூன்றாவது, நான்காவது நிலைகளில் ஊழியர்களை நியமித்து ஆண்டுகள் பலவாகின்றன.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவத் தொழில்நுட்ப ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை பெரும் அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ரயில்வே துறை, பொதுப்பணித்துறை, பாசனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ராணுவம், அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த பணிகள், மின்சார உற்பத்தி நிலையங்கள், தகவல் தொடர்புத்துறை என்று எல்லா இடங்களிலும் வேலை செய்வதற்கு ஆள்கள் இல்லாமல் இடைநிலை அதிகாரிகள் திண்டாடித்தான் வேலைகளை முடிக்கின்றனர்.

இந்த நிலையில் புதிய பதவிகள் வேண்டாம், புதிய ஆள்களை நியமிக்க வேண்டாம், விடுப்பில் ஊழியர்கள் சென்றால் அந்த இடத்துக்குத் தாற்காலிக நியமனம் வேண்டாம் என்றெல்லாம் தடுத்து, அதில்தான் இந்த நாட்டின் பணப் பற்றாக்குறையே அதிகரித்துவிட்டதைப் போல மாய்மாலம் காட்டுவது எதற்காக?

வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு எந்தத்துறையைத் திறந்துவிடலாம், இந்தியாவில் முதலீடு செய்கிறவர்கள் தங்களுடைய லாபத்தைச் சேதாரம் இல்லாமல் இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல என்னென்ன சலுகைகளை வழங்கலாம், இந்திய கனிம வளங்களை அகழ்ந்தெடுத்து கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்க எந்தப் பன்னாட்டு நிறுவனத்தை அனுமதிக்கலாம் என்றெல்லாம் சிந்திக்காமல், இந்தியாவின் வளத்தை எப்படிப் பெருக்கி இந்தியர்களின் வருவாயை உயர்த்தலாம், வேலைவாய்ப்பை எப்படிப் பெருக்கலாம், தேவையற்ற பெட்ரோல், டீசல் பயன்பாட்டையும் விரயத்தையும் தடுக்க பொதுப் போக்குவரத்தை எப்படி மேம்படுத்தலாம் என்றெல்லாம் பிரணாப் முகர்ஜிகளும் மன்மோகன் சிங், மான்டேக் சிங்குகளும் சிந்தித்தால் நல்லது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை இந்த நாட்டின் பட்ஜெட், பற்றாக்குறையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் மட்டும்தான் வரவும் செலவும் சமமாக இருக்கும்வகையில் சமநிலை பட்ஜெட் தாக்கல் செய்தார் என்று வரலாறு கூறுகிறது.

பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதும் அதனால் விலைவாசி உயரும் என்பதும் பொருளாதாரத்தின் அரிச்சுவடிப் பாடம். அதேநேரத்தில், வெளிநாடுகளிலிருந்தும், சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்தும் கடன் வாங்குவதாலும், அளவுக்கு அதிகமாக ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதாலும்கூடப் பணவீக்கம் அதிகரிக்கும்தான்.

ஆனால், இப்படி அதிகமாக அச்சடிக்கப்படும் பணமோ, வாங்கப்படும் கடனோ ஊதாரிச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படாமல், வளர்ச்சிப் பணிகளுக்காகச் செலவிடப்படுமானால், அது தொலைநோக்குப் பார்வையுடன் செய்யப்படும் முதலீடாக அமையும். நமது "நவரத்னா' என்று அழைக்கப்படும் அரசுத்துறை நிறுவனங்களும், பல்வேறு நீர்மின் நிலையங்களும், உருக்கு ஆலைகளும் இந்த வகையைத்தான் சாரும். பண்டித ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் அப்படிச் செய்யப்பட்ட முதலீடுகள்தான் இன்று இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை என்பதை நாம் மறந்துவிடலாகாது.தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும்போது, பற்றாக்குறை பட்ஜெட் தவறல்ல!

உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் கூறுவதே வேத வாக்கு என்று எண்ணி நாட்டைச் சீர்குலைக்காமல், முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு காட்டிய தனியார் துறையும் அரசுத் துறையும் அதனதன் பங்களிப்பை நல்கும் கூட்டுப் பொருளாதாரத்துக்குத் திரும்புவதுதான் இன்றைய பிரச்னைகளுக்குத் தீர்வு.

அதை ஆட்சியாளர்கள் புரிந்து நடந்துகொண்டால் அது அவர்களுக்கும் நல்லது, அவர்களை ""வாழவைக்கும்'' இந்த நாட்டுக்கும் நல்லது.

Tuesday 6 September, 2011

சமுதாயத்தை சீர் செய்ய முயற்சி செய்வோம்

மாற்றம் தேவை சமுதாயத்தை சீர் செய்ய முயற்சி செய்வோம்


நமதூரில் முன்பு பொருளாதார வசதி இல்லாமல் தறி நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி இருந்த காலகட்டத்தில் விரல் விட்டு என்னும் அளவிற்கே நமதூர் நண்பர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று அங்கு இருந்தார்கள். அந்த காலகட்டங்களில் தங்களின் குடும்பத்தாருடன் அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்த தொலைபேசி இணைப்பை அந்த தெருவில் உள்ள சகோதரர்கள் பயன்படுத்தி பேசுவது வழக்கம். அது போல் கடிதப் பரிமாற்றம் மிகவும் முக்கியமானதாகவும், நினைவுகளோடும் இருந்த காலம் அவை. அந்த காலகட்டங்களில் திருமணம் போன்ற குடும்ப விசேசங்களுக்கு நமக்கு தேவையான துணிமணிகளை நமதூரில் உள்ள கடைகள் நமது வீட்டிற்கே கொண்டுவந்து காண்பிப்பார்கள், அதிலிருந்து நமது வீட்டுப் பெண்கள் துணிமணிகளை வாங்கி அணிந்து விசேசங்களை சிறப்பாக செயல்படுத்தினார்கள். அந்த காலகட்டங்களில் ஊர் கட்டுப்பாடுகள், தவறு செய்தால் பஞ்சாயத்தில் கொடுக்கப்படும் தண்டனைக்கு எல்லாம் பயந்து மக்கள் வாழ்ந்தது எல்லாம் நம் கடந்த கால வாழ்க்கையில் மறக்கமுடியாத காலங்கள். அந்த காலங்களில் தவறுகள் மிகவும் அரிதாகவே நடந்தது என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் தற்போது நாகரீகம், அறிவியல் மற்றும் பொருளாதாரம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் தீமைகளும், தவறுகளும் நம்முடைய வாழ்வில் நாம் நிறையவே பத்திரிக்கைகளின் வாயிலாகவும், செய்திகளிலும் தெரிந்து கொண்டேதான் இருக்கிறோம். இவற்றிற்கு என்ன காரணம், இதை நாம் நாம் எவ்வாறு சரி செய்யலாம் என்ற ஒரு எண்ணம் நம் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. காரணம் என்ன என்று பார்த்தால் செல்போன், தொலைகாட்சி பெட்டிகள், பெண்கள் ஆண்கள் துணை இன்றி வெளியில் செல்வது என்று கூறலாம்.

நம்முடைய சமுதாயத்தை சீரளிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு சில கழுகுகள் நம்முடைய சமுதாயப் பெண்களை வட்டமிட்டுக் கொண்டிருகின்றன. இந்த கழுகுகள் நம் சமுதாயப் பெண்களின் செல்போன் எண்களை ஏதாவது ஒரு வழியில் பெற்று அவர்களுக்கு அடிக்கடி போன் செய்வது, குறுந்தகவல் அனுப்புவது என்று ஆரம்பித்து நம் சமுதாயப் பெண்களை அவர்களின் வலையில் வீழ்த்தி அவர்களை வீட்டில் இருந்து பிரித்து திருமணம் என்ற பெயரில் அவர்களை ஏமாற்றி கற்பை சூறையாடிவிட்டு பின்னர் அவர்களை ஏமாற்றி விட்டு சென்றுவிடுகிறார்கள். இதை அவர்கள் தெரியாமல் செய்யவில்லை, தெரிந்தே நமது சமுதாயத்தை சீரழிக்க திட்டமிட்டே செய்கிறார்கள்.

இதே போலதான் தொலைக்காட்சிகளும் தவறான கருத்துக்களை, தவறான சிந்தனைகளை மக்களிடையே கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதுவும் ஒரு வகையில் காரணம்தான். இதோடு மட்டுமல்லாமல் ஆண்கள் துணையில்லாமல் எந்த பெண்கள் தனியாக கடைவீதிகளுக்கோ மற்றும் வெளிஊர் செல்வதையும் தவிர்க்கவேண்டும். சில கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் தனியாக கடைகளுக்கு செல்லும் பெண்களிடமும், மருத்துவமனைக்கு செல்லும் பெண்களிடமும் ஏதாவது காரணம் கூறி அவர்களின் செல்போன் எண்களை வாங்கி அதை தவறாக பயன்படுத்தவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்களே, சகோதரர்களே உங்கள் பிள்ளைகள், அவர்களது நண்பர்கள் யார்? அவர்கள் எங்கே செல்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்? வகுப்புகள் நடக்கும் நேரம், வகுப்புகள் நடக்கும் இடம், நடக்கும் நாட்கள், முடிவடையும் நேரம் என்பவற்றை அறிந்து வைத்திருங்கள். உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் குறித்தும் இதே கவனத்துடன் இருங்கள்! அவர்களது தொலைபேசித் தொடர்புகள் எத்தகையவை என்பதையும் கவனம் செலுத்துங்கள்! அதே போல தொலைக்காட்சி மூலம் பரவும் விஷமங்களையும் ,நமது மார்க்கத்தால் தடை செய்யப்பட்டது என்பதையும் அவர்களிடம் கண்டிப்புடன் எடுத்துக்கூறுங்கள். அதே போல நமது வீட்டுப் பெண்களை ஆண்களின் துணை இல்லாமல் தனியாக தனியாக கடைவீதிகளுக்கு மற்றும் வெளிஊர் செல்லக்கூடாது என்று அறிவுறுத்துங்கள். பெற்றோரின் கவனயீனம்தான் அதிகமான பிள்ளைகள் தடம் மாறிச் செல்வதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்பது சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவருகிறது. ஆண் துணையில்லாமல் தனியாக வெளிஊர் செல்லும் பெண்கள் உயரக உணவு விடுதியில் அந்நிய ஆண்களுக்கு முன்னால் அமர்ந்து தேநீரோ, குளிர்பானங்களோ அருந்துவது நமது சமுதாயத்தை கண்ணிய குறைவாக்கிவிடும். ஆகையால் பெண்களை கணவர் துணையில்லாமல் இதுமாதிரியான இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் .

ஆகவே பெற்றோர்களே, சகோதரர்களே முடிந்த வரை நம்முடைய வீட்டுச் சூழலை இஸ்லாமிய மயப்படுத்துங்கள். நமது குடும்பத்தார்களை குர்ஆன் ஓதுவது, தொழுகை, திக்கிர் போன்ற நல்ல அமல்களில் அதிகமாக ஈடுபட வைப்பது நம் அனைவரின் மீதும் கடமையாகும். இந்த விசயத்தில் நாம் அனைவரும் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மையும், நம் குடும்பத்தார்களையும், நம் சமுதாய மக்களையும் சைத்தானின் கெடுதிகளை விட்டும், அநியாயக்காரர்களின் சூழ்சிகளை விட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்.