Wednesday 23 March, 2011

முஸ்லீம்கள் நிறைந்துள்ள தொகுதியான கடையநல்லூர் யாருக்கு?


கடையநல்லூர் தொகுதி முஸ்லீம்கள் அதிகம் நிறைந்துள்ள தொகுதியாகும். இங்குள்ள முஸ்லீம்கள் பலர் துபாய், மஸ்கட், பஹ்ரைன், சவுதி போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வருமானம் ஈட்டுகின்றனர். சில ஆண்டுகள் தங்கிவிட்டு சம்பாதித்த பணத்தில் தொழில் செய்யலாம் என்று ஊர் திரும்பினால் அதற்கான வாய்ப்புகள் குறைவு. பலர் தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர்.
(2006 தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டுகள்
வேட்பாளர்(கட்சி) ஓட்டுகள்
1) பீட்டர் அல்போன்ஸ் (காங்.) 53,700
2) கமாலுதீன் (அதிமுக) 49,386
3) ஆறுமுகசாமி (பகுஜன் சமாஜ்) 6,760
4) திருப்பதி (சுயே) 3,229
5) சண்முகவேலு (பாஜக) 3,203
6) சண்முகராஜ் (சமாஜ்வாடி) 1,372
7) மக்தூம் (சுயே) 1,196
பாண்டியன் (சுயே) 1,110
8) செந்தில் ராஜ் (சுயே) 490
மொத்த ஓட்டுகள்(பதிவானவை) 1,20,44)
சொக்கம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திராட்சை விளைகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் திராட்சை அனுப்பப்படுகிறது. தொகுதியில் தென்னை விவசாயம் அதிகம் உள்ளதால் ஆங்காங்கே தென்னை நெட்டியில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இருந்தபோதிலும் குறிப்பிட்டு சொல்லும்படியாக பெரிய தொழில் வாய்ப்புகள் எதுவும் இத்தொகுதியில் இல்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த காலம்; 1967ம் ஆண்டு கடையநல்லூர் தொகுதி சந்தித்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மஜீத் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் 446 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளருக்கு வெற்றியை அளித்தனர் தொகுதிவாசிகள். சுப்பையா முதலியார் கடையநல்லூரின் முதல் எம்எல்ஏ என்ற பெருமையைப் பெற்றார்.
(மறு சீரமைப்பில் இடம்பெற்ற பகுதிகள்
தொகுதி மறுசீரமைப்பில் கடையநல்லூர் தொகுதியில் செங்கோட்டை தாலுகா, தென்காசி தாலுகா (பகுதி) சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேலழகியான், கிளாங்காடு, நயினாரகரம், இடைகால், காசிதர்மம் மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள். கடையநல்லூர் நகராட்சி, சாம்பவர்வடகரை, ஆய்க்குடி ஆகிய பேரூராட்சிகள் இடம் பெற்றுள்ளன.)
1971ல் இம்முறை திமுக சார்பில் மீண்டும் களமிறங்கிய சுப்பையா முதலியார் 2வது முறையாகவும் எம்எல்ஏ ஆனார். காங்கிரஸ் வேட்பாளர் மஜீத் இம்முறையும் தோல்வியடைந்தார். 1977ல் நடந்த தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரசாக், காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை வீழ்த்தினார். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் இத்தொகுதியில் தோல்வியடைந்தது.
1980ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சாகுல்அமீது வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் கனி தோல்வியடைந்தார். 1984ம் ஆண்டு முதன்முறையாக திமுக, அதிமுக நேருக்குநேர் மோதியது. இதில் அதிமுக வேட்பாளர் பெருமாள் வெற்றி பெற்றார்.
1989ல் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளராக மீண்டும் கதிரவன் களமிறங்கினார். கடையநல்லூரில் இரண்டு முறை வெற்றியை ருசித்த அதிமுக ஜெ, ஜா என இரண்டு அணிகளாக இத்தேர்தலில் போட்டியிட்டதால், அதன் வேட்பாளர்கள் மூன்றாம், நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் அய்யாத்துரையை எளிதாக வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிரவன் எம்எல்ஏவாக தேர்வு பெற்று சட்டமன்றத்தில் கொறடாவாக பணியாற்றினார்.
1991 தேர்தலிலும் அதிமுக & திமுக நேருக்கு நேர் களம் கண்டன. இம்முறை அதிமுக ஜெ, ஜா இரு அணிகளும் இணைந்திருந்தன. வலுவான அதிமுகவிடம் திமுக வேட்பாளர் கதிரவன் இம்முறை தோல்வியடைந்தார். நாகூர்மீரான் மூலம் மூன்றாவது முறையாக அதிமுக வெற்றிபெற்றது. இதன்மூலம் கடையநல்லூர் தொகுதிக்கு முதன்முதலாக அமைச்சர் அந்தஸ்தும் கிட்டியது. 1996ல் நடந்த தேர்தலில் 3வது முறையாக அதிமுக & திமுக நேருக்கு நேர் மோதியது. திமுக வேட்பாளர் நைனாமுகமது அதிமுக வேட்பாளரை எளிதாக வீழ்த்தினர். மூன்றாவது முறையாக திமுக இங்கு வெற்றியை ருசித்தது.
(33 ஆயிரம் வாக்காளர்கள் அதிகம்
கடையநல்லூர் தொகுதியில் கடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 786 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் 87 ஆயிரத்து 420 பேர் ஆண்கள். 88 ஆயிரத்து 366 பேர் பெண்கள். தற்போதைய நிலையில் கடையநல்லூர் தொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 687 பேர் ஆண்கள். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 759 பேர் பெண்கள். கடந்த தேர்தலை விட தற்போது 33 ஆயிரத்து 660 வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மொத்த வாக்குச்சாவடிகள் 224.)
2001 தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுப்பையாபாண்டியன், திமுக வேட்பாளர் ஷாகுலை வீழ்த்தினார். 2006 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்குக் கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் கூட்டணி பலத்தில் கால் பதித்தது. தென்காசி தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கமாலுதீன் காங்கிரசிடம் தோல்வியைத் தழுவினார். 4 முறை வெற்றி பெற்ற அதிமுகவால் தொகுதியைத் தக்கவைக்க முடியவில்லை.
கடையநல்லூரில் திமுக, அதிமுக, மாறி மாறி போட்டியிட்ட போதிலும் ஒரு தேர்தலில் வெற்றிபெற்ற அணியால் அடுத்த தேர்தலில் வாகை சூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பையா முதலியார் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றாலும் ஒரு முறை சுயேட்சையாகவும், மறுமுறை திமுக சார்பிலும் களமிறங்கி வென்றார்.
கடந்த சட்டசபை தேர்தலைப் போல இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்தான் இங்கு போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் அதிமுகவே நேரடியாக களமிறங்குகிறது. அக்கட்சி சார்பாக, பி. செந்தூர்பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.அத்தோடு, எஸ்.டி.பி.ஐ என்ற பெயரில் செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பின் அரசியல் கட்சியும் இத்தொகுதியில் தன் கட்சி சார்பாக நெல்லை முபாரக் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதிமுக, திமுக கூட்டணிகளில் இத்தொகுதி வேறு முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத நிலையில், எஸ்.டி.பி.ஐக்கு விழும் ஓட்டுகள் இரு திராவிட கட்சிகளின் கூட்டணி வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதாக அமையும்.

வேட்பாளர்கள் மற்றும் பிரசார வியூகம் இவற்றையெல்லாம் கடந்து வெற்றி யாருக்கு என்பது ஜனநாயகத்தின் எஜமானர்களாக விளங்கும் மக்களின் கையில்தான் என்பதில் சந்தேகமில்லை.

Thanks to kdnl.org

ஐக்கிய நாடுகள் சபை

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கு இடையே யுத்தம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவும், நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் உள்நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவது அல்ல. உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைச் சமரசமாகத் தீர்த்துவைத்து அதன் மூலம் போர் மூளாமல் தடுப்பதும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காப்பதும்தான்.
கடந்த இருபது ஆண்டுகளாக, ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குபவையாக இருந்து வருகிறதே தவிர, அப்பாவி மக்களைப் பாதுகாப்பதாகவோ, சின்னஞ்சிறு நாடுகளின் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிப்பதாகவோ இல்லை. வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தலையாட்டி அங்கீகரிப்பதற்காகக் கூட்டப்பட்ட உலக நாடுகளின் அமைப்பாகத் தன்னை ஐ.நா. சபை மாற்றிக் கொண்டிருப்பதன் சமீபத்திய எடுத்துக்காட்டுத்தான் லிபியா மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்.
லிபியா அத்துமீறி தனது அயல்நாட்டின் மீது படையெடுத்திருந்தால் அதைத் தடுக்க வேண்டிய கடமை நிச்சயமாக ஐ.நா. சபைக்கு உண்டு. ஆனால், லிபிய அரசு உள்நாட்டுக் கலவரத்தை அடக்க முயற்சிப்பது தவறு என்று கூறி, புரட்சியாளர்கள் சார்பில் லிபியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தொடுத்திருக்கும் விமானத் தாக்குதலுக்கு ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்க முற்பட்டிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
கடந்த இரண்டு நாள்களாக விமான வெடிகுண்டு வீச்சு, ஏவுகணைத் தாக்குதல் என்று தொடர்ந்து இந்தப் படைகள் லிபியா மீது அரங்கேற்றியிருக்கும் தாக்குதல்களால் தரைமட்டமாகிப் போயிருக்கும் கட்டடங்கள் ஏராளம். செயலிழந்து காணப்படும் விமானத் தளங்கள் பல. உயிரிழந்திருக்கும் எந்தப் பாவமும் அறியாத அப்பாவிகள் நூற்றுக்கணக்கில். இவையெல்லாம் திடுக்கிட வைக்கின்றன.
குறிப்பாக, புரட்சியாளர்களின் எழுச்சி, லிபிய ராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஐ.நா.வின் ஆதரவுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் கூட்டு ராணுவம் லிபியாவுக்கு எதிராகக் களம் இறங்கியிருப்பதன் மூலம், லிபிய அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிராகப் புரட்சியாளர்களைத் தூண்டிவிட்டதுகூட இந்த நாடுகள்தானோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.
அமெரிக்கத் தலைமையிலான "நேட்டோ' படைகள் தமது நாட்டில் எந்தவிதமான உதவி பெறுவதையும் துருக்கி அனுமதிக்க மறுத்துவிட்டிருக்கிறது. ஐ.நா. சபையில் அமெரிக்காவுக்கு ஆதரவான தீர்மானத்துக்கு வாக்களித்த 23 நாடுகளின் அரேபியக் கூட்டமைப்பு இப்போது தாங்கள் தவறு செய்துவிட்டதாகக் கையைப் பிசைகிறது. சாமானிய மக்களின் உயிரிழப்பும், அதிபர் மும்மார் கடாஃபியைக் குறிவைத்து அவர் குடியிருக்கும் பகுதியில் நடத்தப்படும் தாக்குதல்களும் "நேட்டோ' படைகளின் மறைமுக எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று அரேபியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் அமர் மௌசா சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.
கடந்த 20 ஆண்டு காலமாகவே மேலைநாட்டு வல்லரசு நாடுகளின் விபரீத எண்ணங்களின் விளைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகள் ஏராளம். அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருக்கும்போது, கொசோவாவில் தங்களது படைகள் பின்னடைவைச் சந்தித்த வேளையில், 15,000 அடி உயரத்திலிருந்து இலக்கே இல்லாமல் சரமாரியாகக் குண்டுமழை பொழிந்து எதிரிகளைத் தாக்குகிறோம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைப் பலி வாங்கியதில் தொடங்கிய இந்த ரத்த வெறி, இப்போது லிபியாவில் மையம் கொண்டிருக்கிறது, அவ்வளவே.
எதற்காக இப்போது லிபியா மீது தாக்குதல்? புரட்சியாளர்களுக்கு உதவுவதற்காக என்றால் திரிபோலியில் உள்ள அதிபர் மும்மார் கடாஃபியின் இருப்பிடத்தைச் சுற்றித் தாக்குதல் நடத்தி நாசம் விளைவிப்பானேன்? எண்ணெய்க் கிணறுகள் இருக்கும் பகுதிகளை விட்டுவிட்டுத் தாக்குதல் நடத்துவதிலிருந்தே, லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமேயொழிய, அதன் எண்ணெய் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற மறைமுக கபட நாடகம் வெளிப்படுகிறதே...
அமெரிக்கா கூறுகிறது ஆட்சி மாற்றமல்ல குறிக்கோள் என்று. ஆனால், பிரிட்டிஷ் பிரதமர் கேமரோன் கூறுகிறார் லிபிய அதிபர் மும்மார் கடாஃபி அகற்றப்பட வேண்டும் என்று. அப்படியானால் யார் சொல்வது உண்மை?
இவர்களது இலக்கு அதிபர் மும்மார் கடாஃபியா, இல்லை, தங்களுக்குத் தங்கு தடையின்றி லிபியாவின் பெட்ரோலிய வளத்தை அள்ளி வழங்கி உதவும் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதா?
லிபியாவின் எண்ணெய் வளம் மிகுந்த கிழக்குப் பகுதியில் எழுந்திருக்கும் அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிரான புரட்சியாளர்களின் எழுச்சிக்கு, மனித உரிமை மீறல், அடக்குமுறை என்கிற சாக்கில் உதவிக்கரம் நீட்ட முன்வந்திருக்கும் "நேட்டோ' படைகள், இலங்கையில் ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு ஆதரவாகக் களம் இறங்காதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. ஒருவேளை இந்தியா அமெரிக்காவின் விரலசைப்புக்கெல்லாம் தலையசைக்காவிட்டால், காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்காது என்பது என்ன நிச்சயம் என்கிற கேள்வியும் எழுகிறது.
லிபியாவின் மீதான இந்தத் தாக்குதலை உலகிலுள்ள அணிசாரா நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், தங்களது குரலை உரக்க எழுப்பி "நேட்டோ' படைகளின் மறைமுக ஏகாதிபத்திய எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் லிபியாவின் கதியை அவர்களும் எதிர்கொள்ள நேரிடலாம். உள்நாட்டுப் பிரச்னைகளில் மூக்கை நுழைக்க ஐ.நா. சபையைத் துணைக்கு அழைக்கும் தவறைக் கண்டிக்காமல் விட்டால், செர்பியா, ஆப்கானிஸ்தான், இராக், லிபியா என்று தொடரும் அதிகாரப்பூர்வமான தாக்குதல்களை அங்கீகரிப்பதாக அமைந்துவிடும்.
அமெரிக்காவில் அதிபர்கள் மாறுகிறார்களே தவிர, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்போதுமே மாறுவதில்லை என்பதைத்தான் லிபியா மீதான தாக்குதல் உணர்த்துகிறது.

Dinamani-23-3-11