Friday 8 October, 2010

கிவா நடத்தும் மாபெரும் பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்)
கடையநல்லூர் இஸ்லாமிய சகோதரர்களே, நண்பர்களே
உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு
முதன் முறையாக  கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்பார் அசோசியேசன் (கிவா)நடத்தும் மாபெரும்  மகளீர் பயான்.

மார்க்க விழிப்புணர்வை பெண்கள்களுக்கு ஏற்ப்படுத்த கல்லூரி பேராசிரியைகள் (ஆலிமா) கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

வரும் 10 ஆம் தேதி ஞாயிறு   மாலை 4 :00 முதல் 6 :௦௦ வரை.
இடம் கடையநல்லூர் பேட்டை முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள,  உங்கள் வீட்டுப் பெண்களுக்கு அனுமதி கொடுத்து, கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன்பெற  செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

KIWA - UAE

பாப்ரி மஸ்ஜித் நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும்.

கட்டுரையாளர்:பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பர்


அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும். ஆட்சியாளர்களால் பல வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு தீர்மானம் மட்டுமே அந்த தீர்ப்பில் தெளிவாக காணக்கிடைக்கிறது.
நிலத்தின் உரிமை யாருக்கு? என்பதுதான் வழக்கிய முக்கிய பிரச்சனை. தகர்க்கப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் ஒரு புதிய கோயிலை கட்டுங்கள் என்பதுதான் அத்தீர்ப்பின் முக்கிய பலன்.
சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் சமகால அரசியலிலும், மதரீதியான பிளவுகளிலும் மூழ்கிக் கிடக்கிறது. வரலாற்று ரீதியான ஆவணங்களின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் தீர்ப்புக்கூற வேண்டும் என உரிமைக் கோரப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் பரிசீலித்திருந்தும்கூட தீர்ப்பு கூறும் வேளையில் அதனை முற்றிலும் புறக்கணித்து விட்டதாகவே காணமுடிகிறது.
ஒரு நீதிபதி கூறியுள்ளது என்னவெனில், தெய்வீக அம்சம் பொருந்திய நபர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் துல்லியமான ஒரு இடத்தில் பிறந்தார் என்பதாகும். அதனால்தான், கோயிலை அவ்விடத்தில்தான் கட்டவேண்டும் என கூறுகிறார்.
நாட்டு மக்களின் நம்பிக்கையையும், எண்ணங்களையும்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால்,இதனை நிரூபிக்க தேவையான எத்தகையதொரு ஆதாரமும் இல்லை. ஆகையால்தான், இந்த நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்த்தது இத்தகையதொரு தீர்ப்பை அல்ல.
ஹிந்துக்கள் ராமனை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அதன் பெயரால் மட்டும் ராமனின் பிறந்த இடம் தொடர்பான, நிலத்தின் உரிமைத் தொடர்பான தீர்மானங்களை ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்றுக்கொள்வது சரியா?
அதுமட்டுமல்ல, இவ்விடத்தை கைப்பற்றுவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது என்பதும் நினைவுக் கூறத்தக்கது.
நீதிமன்றம் கூறுகிறது, 12-ஆம் நூற்றாண்டில் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததாம். அது தகர்க்கப்பட்ட பிறகே அங்கு மஸ்ஜித் கட்டப்பட்டதாக தீர்ப்பில் கூறப்படுகிறது. அதனாலேயே, அங்கு ஒரு கோயிலை கட்டுவதற்கான நியாயமும் தீர்ப்பில் முன்வைக்கப்படுகிறது.
இதுத்தொடர்பாக அகழ்வாராய்ச்சித்துறை (ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா) நடத்திய ஆய்வுகளும் அவர்களுடைய அனுமானங்களும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அகழ்வாராய்ச்சித் துறையின் அனுமானங்களை, ஏராளமான பிரபல அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கடுமையான கேள்வி எழுப்பியதும், நிராகரித்ததுமாகும்.
இவ்விஷயங்கள் அந்தந்த துறைகளின் வல்லுநர்களின் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாகும். அதில், பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் தற்பொழுதும் உள்ளன. ஆனால், நீதிமன்றமோ ஒரு தலைப்பட்சமான இந்த நிலைப்பாட்டை, பெரிய அளவிலான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இத்தீர்ப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதவியலாது.
இன்னொரு நீதிபதி கூறுகிறார், தான் ஒரு வரலாற்று அறிஞர் இல்லை என்பதால் இவ்வழக்கின் வரலாற்று ரீதியான விவகாரங்களில் தலையிட முடியாது என. ஆனாலும், அவர் கண்டறிந்தது, இந்த வழக்குகளை தீர்மானிப்பதில் வரலாறோ, அகழ்வாராய்ச்சி அறிவியலோ முற்றிலும் தேவையல்ல என்பதாகும். ஆனால்,இங்கு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவெனில் நிலம் தொடர்பான உரிமைக்கோரல்களில் வரலாற்றுரீதியான சாத்தியம் என்ன என்பதாகும்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைப் பெற்றிருந்த வரலாற்றுரீதியான சிதிலங்கள்தான் இங்கு ஆய்வுக்குரிய விஷயம். அங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மஸ்ஜித் ஒன்று நிலைப்பெற்றிருந்தது. அது, இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளின் காரணமாக ஒரு கும்பல் வேண்டுமென்றே அதனை இடித்துத் தள்ளியது.
ஆனால், இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இதுவரைக் கிடைத்த பக்கங்களில் எந்த ஒரு இடத்திலும் இந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவம் நம்முடைய பாரம்பரியத்திற்கு எதிரானது என்றோ அல்லது கண்டிக்கத்தக்க சம்பவம் என்றோ கூறப்படவில்லை. இனி வரவிருக்கும் ராமர்கோயில் என்பது ராமன் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ஒரு இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது கட்டப்பட்டது எனக் கூறப்படும்.
பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் எப்பொழுதோ நடந்ததாக கூறப்படும் கோயில் இடிப்பு நீதிமன்றத் தீர்ப்பில் கண்டிக்கப்படுகிறது. அதுவே, புதிய கோயில் கட்டுவதற்கான நியாயமாகவும் தீர்ப்பில் கூறப்படுகிறது. அங்கே நிலைப்பெற்றிருந்த மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் இந்தளவிற்கு தீர்ப்பில் கண்டிக்கப்படவில்லை. மிகவும் வசதியாக, இவ்வழக்கின் எல்லைக்கு வெளியேதான் மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் என நீதிமன்றம் தீர்மானித்திருக்கும் என தோன்றுகிறது.
நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை நமக்கு தருகிறது. அதாவது, ஏதேனும் ஒரு புனிதர் பிறந்தார் எனக்கூறி ஏதேனும் ஒரு மதப்பிரிவினர் ஏதேனும் ஒரு நிலத்தின் மீது உரிமைக்கோரலாம் என்பதாகும். இனி இத்தகையதொரு ஏராளமான ஜென்மபூமிகள் நாட்டின் பல பகுதிகளிலும் எழும்பும். தமது வசதிக்கேற்ப பொருந்திய ஒரு இடத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சில உரிமை வாதங்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் உருவாக்கினாலே போதும்.
இங்கே நடந்த வரலாற்றுச் சின்னத்தின் இடிப்பை நீதிமன்றம் கண்டிக்காத சூழலில் எதிர்காலத்தில் வழிபாட்டுத்தலங்களை இடிக்க பலரும் கிளம்பினால் அதனை எவ்வாறு தடுக்க இயலும்?
வழிப்பாட்டுத்தலங்களின் நிலையை மாற்றுவதை தடைச்செய்யும் 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெரிதாக ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதுவரையிலான நமது அனுபவம் எடுத்தியம்புகிறது.
வரலாற்றில் நிகழ்ந்ததெல்லாம் நிகழ்ந்ததுதான். அவற்றையொன்றும் இனி மாற்றவியலாது. ஆனால், உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆவணங்கள் பரிசோதிக்கவும், அதன் நம்பிக்கைக்குரிய ஆதாரங்களை கண்டறியவும் நம்மால் இயலும்.
இன்றைய சமகால அரசியல் விருப்பங்களுக்காக வரலாற்றை மாற்றவியலாது. வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்து, அதற்கு பதிலாக மதநம்பிக்கையை நிலைநிறுத்துகிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு.
ஆனால், சமூகத்தில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைப்பெற வேண்டுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கு முக்கியமாக தேவை என்னவெனில், நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவதற்கு மதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த உணர்வு மக்களிடையே ஏற்படவேண்டும்.

 நன்றி:தி ஹிந்து, தேஜஸ் மலையாள நாளிதழ்

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திலேயே

புதுடெல்லி,அக்.8:அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திலேயே மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று டெல்லி ஜூம்மா மஸ்ஜித் தலைமை இமாம் மெளலானா சையத் அகமது புகாரி திட்டவட்டமாக அறிவித்தார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மத அறிஞர்கள் டெல்லியில் வியாழக்கிழமை கூடி அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தார்கள்.

அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மசூதி கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்குத் தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
"அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர்பாக தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.
மஸ்ஜித்திற்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபர் மஸ்ஜித் பிரச்னை தொடங்கியது முதல் அலாகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத்துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவைதான்.
முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக்கொண்டு, வகுப்புவாத சக்திகளுக்குத்தான் காங்கிரஸ் துணைபோய்க்கொண்டிருக்கிறது. இன்றைய கூட்டத்தில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. முஸ்லிம்கள் தனிச்சட்ட வாரிய உறுப்பினர்கள் சிலர் தாங்களாகவே சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு புறக்கடை வழியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரியான சமரசத் தீர்வை அவர்கள் காணப் போகிறார்கள்? இடிக்கப்பட்ட இடத்திலேயே மஸ்ஜிதை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம்.
இன்றைக்கு டெல்லியில் கூடிய நாங்கள் எங்களுடைய அமைப்பு வாயிலாக, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்" என்றார் சையத் அகமது புகாரி.

Sunday 3 October, 2010

வீணாகிப்போன விசாரணைகள், கிடப்பில் போடப்பட்ட ஆதாரங்கள் – அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு !

"பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை" என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

"இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்." இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
"சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்." இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார்? தோற்றவர் யார்? என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.
"இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது." என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.
ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமர்சனம். "இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்" என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், "சுக்குமி-ளகுதி-ப்பிலி" என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, "இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை" என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். "அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை" என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். "நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது" என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் ன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.
"கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை." என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.
இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. "எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி" என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத் தொடங்கியிருக்கிறது.
ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.
நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.
அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?
எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, "சர்ச்சைக்குரிய இடம்" என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.
அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம். போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல (TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.

பின்குறிப்பு – 1:
அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்?
மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?

பின்குறிப்பு – 2:
பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?