Tuesday 20 December, 2011

முல்லைப் பெரியாறு-தமிழ் நாடு ஏமாந்தது போதும்.

தமிழா!!! "இதை நீ படிக்கனும்"...

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர். மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !
“116 வருட சுண்ணாம்பு அணை இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ?
தங்கள் இடத்திலேயே -தங்கள் செலவிலேயே புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம்?” இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.

கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை! புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை  தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்
சொல்ல வேண்டும். இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக கீழே தருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது) எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம்) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே!
இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் பிச்சைக்காரர்கள் ஆவார்கள். பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?
கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும். பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும்.
(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ்.) ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை. அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு! புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும். சரி நிரம்பட்டுமே. நல்லது தானே ! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள். அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது. புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது. புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை - புரிகிறது. ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே? அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.
முதலாவதாக - பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்ப இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும்! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.  இரண்டாவதாக -
1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது. கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,
கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.
கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும். இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது. விட்டார்களா நமது கேரள சகோதரர்கள்? மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள். வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான். மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்
கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.

நன்றி,

Sunday 18 December, 2011

கவனம் – உஷார்.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்.


மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,.
தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.
ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள்.
இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.
இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக “சினிமா’ முதல் காரணமாக இருக்கிறது.
“சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது.
(எல்.சி.டி TV – 20 முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு)
கேபிள் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.
இண்டெர்னெட் மொபைல்கள்,  கம்ப்யூட்டர், லேப்டாப் இண்டெர்நெட் வசதி என்று இந்த “சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.

கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!
· மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.
· யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.
· மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?
· தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.
· கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.
· இ-மெயிலில், சாட்டிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...
என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா?
என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும். ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாவீர். ஒவ்வொருவரும் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். தலைவரும் பொறுப்புதாரியே! அவர் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு மனிதர் அவர் மனைவி குறித்து பொறுப்புதாரியாவர். அவரின் பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கு பொறுப்புதாரியாவாள். அவள் தன் பொறுப்பு பற்றி கேள்வி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியர் தன் எஜமானர் விஷயத்தில் பொறுப்புதாரியாவார். ஒவ்வொருவரும் பொறுப்புதாரியே! அவரவர் தம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்கள்! என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 653)

நவாஸ் இப்னு ஸம்ஆன்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நன்மை பற்றியும், தீமை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். ''நல்லது என்பது, நற்குணம்தான். தீமை என்பது உன் உள்ளத்தை உறுத்துவதும், மக்கள் அதைப் பார்த்து விடுவதை நீ வெறுப்பதும் ஆகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 624)



Thursday 8 September, 2011

சொல்ல மறந்த கதை

சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு எதிராக களமிறங்கிவிட்டனர்.

காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர்; இலங்கைப் பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல் கக்குகின்றனர்.இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர்? முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை.இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், வீதியில் இறங்கிப் போராடி, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செகின்றனர். ஆனால், கொலை நடந்த கொஞ்ச நாளில், இதே நால்வருக்காக வழக்கறிஞர்கள் கூட ஆஜராக மறுத்தது, இவர்களுக்குத் தெரியுமா? அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே, வழக்கறிஞர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறந்துவிட முடியுமா?

இதிலிருந்து என்ன தெரிகிறது? இவையெல்லாம் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டங்கள். சிந்தித்து, விஷயத்தின் வீரியத்தைச் சீர்தூக்கிப் பார்த்து நடத்தப்படுபவை அல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தமிழர்கள் என ஒரு கோஷ்டி கோஷம் போடுகிறது. ராஜிவோடு இறந்தவர்கள் மட்டுமென்ன, சிங்களவர்களா? இப்படி குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்காமல், ஒவ்வொருவருக்கும் ஜாதி, மத, இன அடையாளங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஒருத்தரையும் தண்டிக்க முடியாது.ஆட்டோ சங்கர் கூட தமிழன் தான். ஏன், "வீரப்பர்' கூட, திடீரென தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். தமிழர் என்பதற்காக முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுவித்தால், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று இளம்பிஞ்சுகளை நெருப்பில் பொசுக்கிய நெடுஞ்செழியன், முனியப்பன், மாது ஆகிய மூவரும் கூட தமிழர்கள் தான். ராமதாசைக் கேட்டால், "அவர்கள் வன்னிய சொந்தங்கள்' என, இன்னும் நெருக்கம் காட்டுவார். அவர்களையும் விடுவித்துவிட வேண்டியது தானா?

தமிழர்களுக்காக ஒரு குழு, சீக்கியர்களுக்காக ஒரு குழு, தெலுங்கர்களுக்காக ஒரு குழுவெனக் கிளம்பிக் கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டம் எதற்கு, காவல் துறை எதற்கு, நீதிமன்றங்கள் எதற்கு? அத்தனையையும் கலைத்துவிட்டு, வலுவான குழு சொல்வதே வேதாந்தம் என்றாக்கிவிட வேண்டியது தானே."குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவைப் பரிசீலிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுவிட்டது; இது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது; நியாயமற்றது' என, சட்டத்தைக் கரைத்துக் குடித்த ராம் ஜெத்மலானி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். மூவர் தரப்பிலும் வாதாடிய வழக்கறிஞர்கள் வைத்த வாதம், காலதாமதம் மட்டுமே.

இதே 11 ஆண்டுகள் நான்கு மாத தாமதத்தோடு, "உங்கள் கருணை மனு ஏற்கப்படுகிறது; நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள்' என ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தால், "அதெல்லாம் கிடையாது; நீங்கள் ரொம்ப தாமதமாக முடிவெடுத்துவிட்டீர்கள்; நாங்கள் சிறையில் தான் இருப்போம்' என, சொல்லியிருப்பார்களா?கருணை மனுவை பரிசீலிப்பதற்கு கவர்னருக்கோ, ஜனாதிபதிக்கோ காலக்கெடு எதுவும் சட்டத்தில் விதிக்கப்படவில்லை. சீக்கிரமாக பரிசீலிக்கச் சொல்லி கேட்டுக்கொள்ளலாம்; அவ்வளவே. கேபினட்டை யாரும் நிர்பந்திக்க முடியாது.காலாகாலத்தில் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் தான் வலியுறுத்தி வருகின்றன. அதே நீதிமன்றங்களில் கூட, 25 ஆண்டுக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் இருப்பதை மறந்துவிடுவதற்கில்லை.உணர்ச்சிகளின் உந்துதலில் தீர்ப்புகள் திருத்தப்படுமானால், குற்றங்களின் எண்ணிக்கை ஒருக்காலும் குறையப்போவதில்லை!

அரசியல்வாதிகளின் போட்டா போட்டி!மூவரின் மரண தண்டனையை மாற்ற வேண்டும் என்பதில், அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் போட்டா போட்டி அலாதியானது. இதற்காகவே கட்சி நடத்தும் வைகோ, ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் மற்றும் சீமான் போன்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. எந்தப் பிரச்னை பற்றி எரியுமோ, அந்தப் பிரச்னை மீது, முடிந்த வரை எண்ணெய் ஊற்றுவர். தீர ஆராய்ந்து உண்மையை உணரும் நோக்கமில்லாமல், செங்கொடிக்கு சிலை வைக்கும் வரை சென்றுவிட்ட பிறகு, சொல்வதற்கு எதுவும் இல்லை.தமிழ், தமிழர் பற்றிய அரசியல் எனும்போது, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பங்களிப்பு இல்லாமல் எப்படி? "ஆயுள் முழுவதும் தங்கள் தவறை எண்ணி வருந்தும் விதமாகத் தான் தண்டனை இருக்க வேண்டும்; அதனால், மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்' என, முதல் நாள், கருணை மனு விடுத்தார்.மறுநாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அ.தி.மு.க., அந்தப் பெயரைத் தட்டிச் சென்றுவிடுமோ என்றஞ்சி, "அவர்கள் மூவரையும் விடுதலையே செய்துவிட வேண்டும்' என, ஒரே போடாக போட்டுவிட்டார். தூக்குக் கயிறை எதிர்நோக்கியிருக்கும் முருகன் கூட இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை.கொண்ட கொள்கையில் உடும்புப் பிடியாக இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட சலனப்பட்டுவிட்டது அதிசயம் தான். முதல் நாள், "எனக்கெல்லாம் அந்த அதிகாரம் கிடையாது' என்றவர், மறுநாளே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.காங்கிரசின் பெயரைச் சொல்லி, அதன் கொடி நிறத்திலேயே, "சேனல்' நடத்துபவர்கள் கூட, இந்தப் பிரச்னையில் தலையிடவில்லை. ராஜிவ் கொலையை நினைவுபடுத்துவதை விட, "ராத்திரி நேரத்து பூஜையில்' பாணி பாடல்கள் தான் கல்லா கட்ட உதவும் என தீர்மானித்துவிட்டனர் போல. எல்லாம் ஓட்டு படுத்தும் பாடு. ஆனால், இது ஓட்டாக மாறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.ஏனெனில், நான்கு பேர் கூடி நின்று கோஷம் போடுவதெல்லாம், மக்கள் கருத்தாகிவிடாது என்பதற்கு, கடந்த தேர்தல் முடிவுகளே சாட்சி.

ராஜிவுடன் இறந்தவர்கள் எத்தனை பேர்?கடந்த 1991ம் ஆண்டு, மே 21 இரவு, 10 மணி 18 நிமிடங்களில் வெடித்தது அந்த மனித வெடிகுண்டு. அதில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் குழப்பம் தொடர்கிறது; காரணம் சுலபமானது. இறந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தினால், குழப்பம் தீர்ந்துவிடும்.மனித வெடிகுண்டின் இலக்கு ராஜிவ். அவரோடு இறந்த ஒரே அரசியல்வாதி லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகர். இவர்கள் தவிர, ராஜிவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி பி.கே.குப்தா, எஸ்.பி., முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப், சப் - இன்ஸ்பெக்டர் எத்திராஜு, கான்ஸ்டபிள்கள் முருகன், தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன் என ஒன்பது பேர் பலியாகினர். இவர்களைத் தவிர, லதா கண்ணன், கோகிலவாணி, சந்தானி பேகம், சரோஜாதேவி, டேனியல் பீட்டர் என மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இவர்கள், லதா கண்ணனின் தலைமையில், காங்கிரஸ் பிரமுகர் மரகதம் சந்திரசேகருக்காக பணியாற்ற வந்தவர்கள்.மேற்சொன்ன ஐந்து பேர் தவிர, மனித வெடிகுண்டான தானுவும், அவர்களால் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட அரிபாபுவும் உயிரிழந்தனர். ஆக மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 18. இவர்களில் அப்பாவிகள் 16 பேர்; சதித் திட்டத்தில் பங்கு பெற்றவர்கள் இருவர்.

மரண தண்டனையும், மனிதநேயமும்:"இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், 21-ம் நூற்றாண்டைப் போன்ற நாகரிக காலத்தில் மரண தண்டனை என்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனம்' என்பது, கொலையாளிகளுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளவர்களின் வாதம்.கூர்ந்து கவனித்தால் தான் தெரியும், இவர்களது நோக்கம் மரண தண்டனையை ரத்து செய்வது அல்ல; இந்த மூவரை மட்டும் விடுவிப்பது தான் என்று. ஒருவேளை, அவர்களது வாதம், ஒட்டுமொத்த மரண தண்டனைக்கே எதிரானது தான் என்றால், பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும், மும்பையைச் சிதறடித்த அஜ்மல் கசாப்புக்கும் கூட மரண தண்டனை கூடாது என்பார்களா?

இந்தக் கேள்வியை, ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, பகிரங்கமாகவே கேட்டுவிட்டார். மரண தண்டனைக்கு எதிராக சண்டமாருதம் செய்தவர்கள் யாரும் சத்தமே காட்டவில்லை. இப்படி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனையை ரத்து செய்து கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்காது; சட்டாம்பிள்ளைகளின் ஆட்சி தான் நடக்கும். உண்மையான காட்டாட்சியை அப்போது தான் காணமுடியும்.

மரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என்கிறபோதே அஞ்சாமல், படுபாதகச் செயல்களைச் செய்யத் தயங்காதவர்கள், அதை ரத்தும் செய்துவிட்டால், நெஞ்சுரம் கொண்டுவிட மாட்டார்களா? எந்த அட்டூழியத்தையும் செய்யத் துணிந்துவிட மாட்டார்களா?"உலகின் 130 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது; 80 நாடுகளில் மரண தண்டனை இருந்தாலும், அது நிறைவேற்றப்படுவதில்லை' என, புதிதாக முளைத்த சில, "புத்தர்கள்' புள்ளிவிவரம் அளிக்கின்றனர். அதன் பிறகு, அந்த, 210 நாடுகளிலும் கொலைகள் நடப்பதில்லையா, கற்பழிப்புகள் குறைந்துவிட்டனவா, மக்கள் ஞானமடைந்துவிட்டனரா என்பன போன்ற கேள்விகளுக்கு, இவர்கள் பதில் அளிப்பதில்லை.

இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எல்லா கொலைக் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவதில்லை. அரிதினும் அரிதான வழக்குகளிலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்று வீசியது, அரிதான வழக்கில்லை எனில், வேறென்ன? தவறு செய்பவர்களே இல்லாத நாட்டுக்கு தண்டனைகள் தேவையில்லை; பிஞ்சுக் குழந்தை என்று கூட பார்க்காத காமுகர்களுக்கும், காது தோட்டுக்காக கழுத்தையே அறுக்கும் கிராதகர்களுக்கும், குடிபோதையில் உயிர் பறிக்கும் கொலைகாரர்களுக்கும், குருவியைச் சுடுவது போல சுட்டுத்தள்ளும் கசாப்களுக்கும், மரண தண்டனை அன்றி, வேறென்ன தண்டனை தருவது? அவர்கள் வாதத்துக்கே வருவோம்... பயங்கரவாதிகளைப் பழிவாங்குவதாகச் சொல்லி, ஒட்டுமொத்த இனத்தையே கொன்று குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளாரே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே; ஒருவேளை, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சர்வதேச நீதிமன்றம், ஆறு மாத சிறைத் தண்டனையும், 600 ரூபாய் அபராதமும் விதித்தால், இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நடுரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என கொக்கரிக்க மாட்டார்களா?

தண்டனைக்கு உள்ளானவர்களை, மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று ஒரு தரப்பு கொடி பிடிக்கத் துவங்கியுள்ளது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ, போதையின் பிடியிலோ இல்லாமல், நன்கு திட்டமிட்டு, ஒரு முறைக்கு இரு முறை ஒத்திகை பார்த்து நடத்தப்பட்டது தான் ராஜிவ் படுகொலை. இறந்தது அவர் மட்டுமல்ல; அவரது தொண்டர்கள்; பாதுகாப்புக்கு நின்றவர்கள் என மேலும் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு குடும்பம், குட்டி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா யாரும் இல்லையா? அவர்களுக்கு மட்டும் மனிதாபிமானம் காட்டப்பட்டிருக்க வேண்டாமா? இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டே போனால், அவற்றுக்கு ஒருக்காலும் தீர்வு கிடைக்காது. ஒரே வரியில் சொல்வதானால், மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே காட்டப்பட வேண்டியது!

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்: ராஜிவுடன் கொலையுண்ட ஒரே அரசியல்வாதி, லீக் முனுசாமி, 65, காங்கிரசின் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவான தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் லீகின் பொதுச் செயலராக இருந்தவர். அதனாலேயே லீக் முனுசாமி என்றழைக்கப்பட்டவர். இவரது மகன் , 61, இன்றளவும் தந்தையின் பட்டத்தையும், துக்கத்தையும் சுமந்துகொண்டு இருக்கிறார்.

சம்பவம் நடந்தபோது ஏற்பட்ட சோகத்தையும், தற்போதைய நிகழ்வுகளையும் பற்றி அவர் கூறியதாவது:ராஜிவ் கொல்லப்பட்ட அதே இரவில், மயிலை மாங்கொல்லையில் ஒரு பொதுக்கூட்டத்தில் இருந்தேன். தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்த, குடும்பத் தோழி ஒருவர், எங்கள் வீட்டுக்கு போன் செய்து, "ராஜிவ் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன; உங்கள் தந்தை எங்கே?' என விசாரித்தார்.தேர்தல் பணிக்காக, எங்கள் தந்தை ஒரு வாரமாக அங்கே தான் முகாமிட்டிருந்தார். பதறியடித்து, போளூர் வரதன் வீட்டுக்குச் சென்றோம். அவர், உண்மையைச் சொல்லத் தயங்கி, "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்றார்.எந்த மருத்துவமனை எனத் தெரியவில்லை. சாலையெங்கும் நெருப்புக் கோளம். திரும்பிய இடமெல்லாம் கலவரக் காட்சி. அரை கிலோ மீட்டர் தூரம் கடக்க, அரை மணி நேரம். காரின் முகப்பில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., கொடிகளைக் கட்டி, அப்பல்லோ, அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் என, அந்த நள்ளிரவு நேரத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடினோம்.அதிகாலை 3 மணிக்கு, வீட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. "வானொலியில், ராஜிவோடு இறந்தவர்களின் பட்டியலில், முனுசாமி என்ற பெயரையும் சொல்கின்றனர். அது நம் தந்தையாக இருக்குமோ' என, கதறினர்.

அப்படியே ஸ்ரீபெரும்புதூருக்குத் திருப்பினோம். அங்கிருந்த ஒரு போலீஸ் அதிகாரி, உள்ளூர் மருத்துவமனையில் தந்தையின் உடல் - ஆம், உடல் - இருப்பதாகக் கூறினார். தந்தையைப் பார்த்ததும், வெடித்துப் பிளிறினோம். கை துண்டாகியிருந்தது. வயிறு கிழிந்திருந்தது. "ஒருவன் கூட உயிர் பிழைக்கக் கூடாது; பிழைத்தவனும் ஒழுங்காக நடமாடக் கூடாது' என்ற நோக்கத்தில், வெடிகுண்டில், ஆணிகளைச் செருகியிருப்பர் போல. தந்தையின் உடலெங்கும் இரும்புத் துகள்கள் துளைத்திருந்தன. ஒவ்வொன்றாய் அகற்ற அகற்ற, பச்சை ரத்தம் பாய்ந்தது. எங்கள் குடும்பத்துக்கு முகவரியாய், முழுமதியாய் இருந்தவர் அப்பா தான். மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என, அவருக்கு ஆறு பிள்ளைகள். இருவருக்குத் தான் திருமணமாகியிருந்தது. இன்னும் நாலு பேரை கரையேற்ற வேண்டியிருந்த நேரத்தில், இந்த சதிக்கு இரையானார். இப்படி எத்தனையோ குடும்பங்கள்; எத்தனையோ துயரங்கள். அத்தனையையும் மறந்துவிட்டு, திடீரென கிளம்பியிருக்கிறது மனிதாபிமான கோஷம். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம், நியாயம் கிடைத்திருக்கிறது என நினைத்திருந்த நேரத்தில், அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது. தமிழக வரலாற்றில் ஆறாத வடுவாய்ப் போன ராஜிவ் கொலை வழக்கை, இம்மண்ணின் மக்களால் ஒருக்காலும் மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது. உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்துவிட்டவர்களுக்கோ, அடிதடி முற்றி மரணம் ஏற்பட்டிருந்தாலோ மன்னிப்பு வழங்கலாம். இது, திட்டமிட்ட படுகொலை. பிரதமர் வி.பி.சிங் கூட்டத்திலேயே ஒத்திகை பார்க்கப்பட்ட படுபாதகம். அன்னிய நாட்டு சதியோடு நடந்த கொடூரம்.

ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்றவர்களை, சாதாரண கொலையாளிகளோடு கூட ஒப்பிடக் கூடாது. சட்டம் எல்லாருக்கும் சமம் என்று சொல்லிவிட்டு, இவர்களை மட்டும் மன்னிப்பது நியாயமில்லை. அப்படியானால், ராஜாவையும், கனிமொழியையும், கல்மாடியையும் கைது செய்வது எதற்காக? ஊழல் செய்தவர்களுக்கே தண்டனை எனும்போது, உயிரைக் குடித்தவர்களை எப்படி விட்டுவைக்கலாம்?தமிழக முதல்வருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்... 1991க்கு முன்பு இருந்ததைப் போல, தமிழகத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கூட்டம், பல பெயர்களில், பல போர்வையில் புற்றீசல் போல முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவற்றை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், தேசத் தலைவர்களின் இழப்பைத் தடுக்கவே முடியாது போகும். இவ்வாறு குமுறி முடித்தார், லீக் மோகன்.

அதே சம்பவத்தில் பலியான இன்னொருவர், இளையான்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட எஸ்.பி., முகமது இக்பால். அவரது மகன் ஜாவித் இக்பாலுக்கும் ஆவேசம் அடங்கவில்லை.

"தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாம். நாங்கள் மட்டுமென்ன ஜப்பானியர்களா? இவர்கள் கொலை பண்ணிக்கொண்டே இருப்பர்; நாம் மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?""எங்கள் தந்தைமார்களை இழந்து, நாங்கள் அனாதையாக நடுத்தெருவில் நின்றோமே. எங்களுக்கெல்லாம் குடும்பம், குட்டி இல்லையா? முருகனுக்கும், சாந்தனுக்கும் மட்டும் தான் இருக்கிறதா?" "இந்தக் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்காதது தான் நாங்கள் செய்த குற்றமா?'' என கொதித்தெழுந்தவர், வீட்டுக்கு அழைத்துச் செல்லத் தயங்கினார்." "அப்பாவின் மரணம் பற்றி பேசினாலே அம்மா கதறத் தொடங்கிவிடுகிறார்,'' என காரணம் சொன்னார். ""எங்கள் குடும்பத்துக்கு நடந்த, "துன்பியல் சம்பவம்' கொலையாளிகள் குடும்பத்துக்கு ஏன் நடக்கக் கூடாது?'' என, அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

நன்றி
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295

Wednesday 7 September, 2011

பற்றாக்குறை பட்ஜெட் தவறல்ல!!


நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், அவருடைய கவலை விலைவாசி உயர்ந்தது குறித்தோ, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவது குறித்தோ, நடுத்தர வர்க்கமும் ஏழை எளிய மக்களும் அன்றாடச் செலவுகளையே சமாளிக்க முடியாமல் திண்டாடி வருவது குறித்தோ இருந்தால் அது நியாயம்.

மாறாக, அவருடைய கவலையெல்லாம் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை உயரும் அளவுக்கு இந்தியாவில் விலையை உயர்த்த முடியவில்லையே என்றும் கெரசின், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் உணவு தானியங்களின் சாகுபடிக்கும், விவசாயத்துக்குப் பயன்படும் உரங்களுக்குமான மானியச்செலவு அதிகமாகிக் கொண்டே போகிறதே என்று இருக்கும்போது நாமும் கவலைப்படுகிறோம், நம்மைப் பற்றிச் சிந்திக்க யாருமே இல்லையா என்று.

மத்திய அரசின் வருவாயைவிட செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது, பற்றாக்குறை அளவு பெரிதாகிக்கொண்டே வருகிறது என்பதால் சில சிக்கன நடவடிக்கைகளை கண்டிப்புடன் எடுக்கத் தொடங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார் அவர்.

அந்த நடவடிக்கைகள் என்னவென்றால் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன, வீண் செலவுகள் செய்யக்கூடாது என்று எல்லா அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது, புதிதாக கார்கள், ஜீப்புகள், வேன்கள் வாங்க வேண்டாம் என்று எல்லா துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன; 5 நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்குகள், சந்திப்புகள், துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இவற்றையெல்லாம் எந்தத் தடையுமின்றி இவர்கள் செய்துவந்தார்கள், இப்போதுதான் நிறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்று இதிலிருந்து புலனாகிறது. இப்போதாவது நல்ல புத்தி வந்து நிலைமை தெரிந்து செயல்பட முடிவெடுத்திருக்கிறார்களே, அதுவரை மகிழ்ச்சி.

இந்தக் கட்டுப்பாடுகளும் சிக்கன நடவடிக்கைகளும் வெறும் கண் துடைப்புதான் என்பதைக் குழந்தைகூடச் சொல்லிவிடும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது வீரர்கள் பயன்படுத்துவதற்காக குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், கட்டில்கள், சேர்கள், நாற்காலிகள், கூடாரத் துணிகள், உடற்பயிற்சிக் கருவிகள் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்த தொகையையும் விலைக்கு வாங்கிய தொகையையும் படிக்கப்படிக்க ரத்தம் கொதிக்கிறது. அதே பொறுப்பற்ற தன்மை அரசின் அன்றாட நிர்வாகத்திலும் குறைவறவே நிலவுகிறது. இந்த அளவுக்கு ஊதாரித்தனத்தையும் ஊழலையும் அனுமதித்துவிட்டு சிக்கன நடவடிக்கைகள் குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிப்பளுவுக்கு ஏற்ப இரண்டாவது, மூன்றாவது, நான்காவது நிலைகளில் ஊழியர்களை நியமித்து ஆண்டுகள் பலவாகின்றன.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவத் தொழில்நுட்ப ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை பெரும் அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ரயில்வே துறை, பொதுப்பணித்துறை, பாசனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ராணுவம், அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த பணிகள், மின்சார உற்பத்தி நிலையங்கள், தகவல் தொடர்புத்துறை என்று எல்லா இடங்களிலும் வேலை செய்வதற்கு ஆள்கள் இல்லாமல் இடைநிலை அதிகாரிகள் திண்டாடித்தான் வேலைகளை முடிக்கின்றனர்.

இந்த நிலையில் புதிய பதவிகள் வேண்டாம், புதிய ஆள்களை நியமிக்க வேண்டாம், விடுப்பில் ஊழியர்கள் சென்றால் அந்த இடத்துக்குத் தாற்காலிக நியமனம் வேண்டாம் என்றெல்லாம் தடுத்து, அதில்தான் இந்த நாட்டின் பணப் பற்றாக்குறையே அதிகரித்துவிட்டதைப் போல மாய்மாலம் காட்டுவது எதற்காக?

வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு எந்தத்துறையைத் திறந்துவிடலாம், இந்தியாவில் முதலீடு செய்கிறவர்கள் தங்களுடைய லாபத்தைச் சேதாரம் இல்லாமல் இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல என்னென்ன சலுகைகளை வழங்கலாம், இந்திய கனிம வளங்களை அகழ்ந்தெடுத்து கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்க எந்தப் பன்னாட்டு நிறுவனத்தை அனுமதிக்கலாம் என்றெல்லாம் சிந்திக்காமல், இந்தியாவின் வளத்தை எப்படிப் பெருக்கி இந்தியர்களின் வருவாயை உயர்த்தலாம், வேலைவாய்ப்பை எப்படிப் பெருக்கலாம், தேவையற்ற பெட்ரோல், டீசல் பயன்பாட்டையும் விரயத்தையும் தடுக்க பொதுப் போக்குவரத்தை எப்படி மேம்படுத்தலாம் என்றெல்லாம் பிரணாப் முகர்ஜிகளும் மன்மோகன் சிங், மான்டேக் சிங்குகளும் சிந்தித்தால் நல்லது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை இந்த நாட்டின் பட்ஜெட், பற்றாக்குறையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் மட்டும்தான் வரவும் செலவும் சமமாக இருக்கும்வகையில் சமநிலை பட்ஜெட் தாக்கல் செய்தார் என்று வரலாறு கூறுகிறது.

பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதும் அதனால் விலைவாசி உயரும் என்பதும் பொருளாதாரத்தின் அரிச்சுவடிப் பாடம். அதேநேரத்தில், வெளிநாடுகளிலிருந்தும், சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்தும் கடன் வாங்குவதாலும், அளவுக்கு அதிகமாக ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதாலும்கூடப் பணவீக்கம் அதிகரிக்கும்தான்.

ஆனால், இப்படி அதிகமாக அச்சடிக்கப்படும் பணமோ, வாங்கப்படும் கடனோ ஊதாரிச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படாமல், வளர்ச்சிப் பணிகளுக்காகச் செலவிடப்படுமானால், அது தொலைநோக்குப் பார்வையுடன் செய்யப்படும் முதலீடாக அமையும். நமது "நவரத்னா' என்று அழைக்கப்படும் அரசுத்துறை நிறுவனங்களும், பல்வேறு நீர்மின் நிலையங்களும், உருக்கு ஆலைகளும் இந்த வகையைத்தான் சாரும். பண்டித ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் அப்படிச் செய்யப்பட்ட முதலீடுகள்தான் இன்று இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை என்பதை நாம் மறந்துவிடலாகாது.தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும்போது, பற்றாக்குறை பட்ஜெட் தவறல்ல!

உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் கூறுவதே வேத வாக்கு என்று எண்ணி நாட்டைச் சீர்குலைக்காமல், முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு காட்டிய தனியார் துறையும் அரசுத் துறையும் அதனதன் பங்களிப்பை நல்கும் கூட்டுப் பொருளாதாரத்துக்குத் திரும்புவதுதான் இன்றைய பிரச்னைகளுக்குத் தீர்வு.

அதை ஆட்சியாளர்கள் புரிந்து நடந்துகொண்டால் அது அவர்களுக்கும் நல்லது, அவர்களை ""வாழவைக்கும்'' இந்த நாட்டுக்கும் நல்லது.

Tuesday 6 September, 2011

சமுதாயத்தை சீர் செய்ய முயற்சி செய்வோம்

மாற்றம் தேவை சமுதாயத்தை சீர் செய்ய முயற்சி செய்வோம்


நமதூரில் முன்பு பொருளாதார வசதி இல்லாமல் தறி நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி இருந்த காலகட்டத்தில் விரல் விட்டு என்னும் அளவிற்கே நமதூர் நண்பர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று அங்கு இருந்தார்கள். அந்த காலகட்டங்களில் தங்களின் குடும்பத்தாருடன் அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்த தொலைபேசி இணைப்பை அந்த தெருவில் உள்ள சகோதரர்கள் பயன்படுத்தி பேசுவது வழக்கம். அது போல் கடிதப் பரிமாற்றம் மிகவும் முக்கியமானதாகவும், நினைவுகளோடும் இருந்த காலம் அவை. அந்த காலகட்டங்களில் திருமணம் போன்ற குடும்ப விசேசங்களுக்கு நமக்கு தேவையான துணிமணிகளை நமதூரில் உள்ள கடைகள் நமது வீட்டிற்கே கொண்டுவந்து காண்பிப்பார்கள், அதிலிருந்து நமது வீட்டுப் பெண்கள் துணிமணிகளை வாங்கி அணிந்து விசேசங்களை சிறப்பாக செயல்படுத்தினார்கள். அந்த காலகட்டங்களில் ஊர் கட்டுப்பாடுகள், தவறு செய்தால் பஞ்சாயத்தில் கொடுக்கப்படும் தண்டனைக்கு எல்லாம் பயந்து மக்கள் வாழ்ந்தது எல்லாம் நம் கடந்த கால வாழ்க்கையில் மறக்கமுடியாத காலங்கள். அந்த காலங்களில் தவறுகள் மிகவும் அரிதாகவே நடந்தது என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் தற்போது நாகரீகம், அறிவியல் மற்றும் பொருளாதாரம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் தீமைகளும், தவறுகளும் நம்முடைய வாழ்வில் நாம் நிறையவே பத்திரிக்கைகளின் வாயிலாகவும், செய்திகளிலும் தெரிந்து கொண்டேதான் இருக்கிறோம். இவற்றிற்கு என்ன காரணம், இதை நாம் நாம் எவ்வாறு சரி செய்யலாம் என்ற ஒரு எண்ணம் நம் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. காரணம் என்ன என்று பார்த்தால் செல்போன், தொலைகாட்சி பெட்டிகள், பெண்கள் ஆண்கள் துணை இன்றி வெளியில் செல்வது என்று கூறலாம்.

நம்முடைய சமுதாயத்தை சீரளிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு சில கழுகுகள் நம்முடைய சமுதாயப் பெண்களை வட்டமிட்டுக் கொண்டிருகின்றன. இந்த கழுகுகள் நம் சமுதாயப் பெண்களின் செல்போன் எண்களை ஏதாவது ஒரு வழியில் பெற்று அவர்களுக்கு அடிக்கடி போன் செய்வது, குறுந்தகவல் அனுப்புவது என்று ஆரம்பித்து நம் சமுதாயப் பெண்களை அவர்களின் வலையில் வீழ்த்தி அவர்களை வீட்டில் இருந்து பிரித்து திருமணம் என்ற பெயரில் அவர்களை ஏமாற்றி கற்பை சூறையாடிவிட்டு பின்னர் அவர்களை ஏமாற்றி விட்டு சென்றுவிடுகிறார்கள். இதை அவர்கள் தெரியாமல் செய்யவில்லை, தெரிந்தே நமது சமுதாயத்தை சீரழிக்க திட்டமிட்டே செய்கிறார்கள்.

இதே போலதான் தொலைக்காட்சிகளும் தவறான கருத்துக்களை, தவறான சிந்தனைகளை மக்களிடையே கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதுவும் ஒரு வகையில் காரணம்தான். இதோடு மட்டுமல்லாமல் ஆண்கள் துணையில்லாமல் எந்த பெண்கள் தனியாக கடைவீதிகளுக்கோ மற்றும் வெளிஊர் செல்வதையும் தவிர்க்கவேண்டும். சில கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் தனியாக கடைகளுக்கு செல்லும் பெண்களிடமும், மருத்துவமனைக்கு செல்லும் பெண்களிடமும் ஏதாவது காரணம் கூறி அவர்களின் செல்போன் எண்களை வாங்கி அதை தவறாக பயன்படுத்தவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்களே, சகோதரர்களே உங்கள் பிள்ளைகள், அவர்களது நண்பர்கள் யார்? அவர்கள் எங்கே செல்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்? வகுப்புகள் நடக்கும் நேரம், வகுப்புகள் நடக்கும் இடம், நடக்கும் நாட்கள், முடிவடையும் நேரம் என்பவற்றை அறிந்து வைத்திருங்கள். உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் குறித்தும் இதே கவனத்துடன் இருங்கள்! அவர்களது தொலைபேசித் தொடர்புகள் எத்தகையவை என்பதையும் கவனம் செலுத்துங்கள்! அதே போல தொலைக்காட்சி மூலம் பரவும் விஷமங்களையும் ,நமது மார்க்கத்தால் தடை செய்யப்பட்டது என்பதையும் அவர்களிடம் கண்டிப்புடன் எடுத்துக்கூறுங்கள். அதே போல நமது வீட்டுப் பெண்களை ஆண்களின் துணை இல்லாமல் தனியாக தனியாக கடைவீதிகளுக்கு மற்றும் வெளிஊர் செல்லக்கூடாது என்று அறிவுறுத்துங்கள். பெற்றோரின் கவனயீனம்தான் அதிகமான பிள்ளைகள் தடம் மாறிச் செல்வதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்பது சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவருகிறது. ஆண் துணையில்லாமல் தனியாக வெளிஊர் செல்லும் பெண்கள் உயரக உணவு விடுதியில் அந்நிய ஆண்களுக்கு முன்னால் அமர்ந்து தேநீரோ, குளிர்பானங்களோ அருந்துவது நமது சமுதாயத்தை கண்ணிய குறைவாக்கிவிடும். ஆகையால் பெண்களை கணவர் துணையில்லாமல் இதுமாதிரியான இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் .

ஆகவே பெற்றோர்களே, சகோதரர்களே முடிந்த வரை நம்முடைய வீட்டுச் சூழலை இஸ்லாமிய மயப்படுத்துங்கள். நமது குடும்பத்தார்களை குர்ஆன் ஓதுவது, தொழுகை, திக்கிர் போன்ற நல்ல அமல்களில் அதிகமாக ஈடுபட வைப்பது நம் அனைவரின் மீதும் கடமையாகும். இந்த விசயத்தில் நாம் அனைவரும் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மையும், நம் குடும்பத்தார்களையும், நம் சமுதாய மக்களையும் சைத்தானின் கெடுதிகளை விட்டும், அநியாயக்காரர்களின் சூழ்சிகளை விட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்.



Wednesday 31 August, 2011

சுன்னத்தான நோன்புகள்

ஷவ்வால் மாத நோன்பு.
யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.
ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)
அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.
ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.
அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.
முஹர்ரம் மாத நோன்பு
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். "இந்நாளின் சிறப்பென்ன?" என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது மகத்தான நாளாகும். இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், "நாங்கள்தாம் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள்" என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் (முஸ்லிம்களை) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய(ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும், "நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (இது ஹிஜிரீ 10ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகும்).
மாதத்தில் மூன்று நோன்புகள்.
"மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.
''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்கவும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.
திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்பு
நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர்.அறிப்பாளர் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.
"ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.
நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.
வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?
நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், "வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா?" என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றிவெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.
சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.
"உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம்,(சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத் தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவது மென்றுவிடட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்
இரு பெருநாள்களில் நோன்பு இல்லை.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பதற்குத் தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிப்பாளர் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
"அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை" என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.
காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது
''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?" என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான்(எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன். நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன்"என்றோ கூறினார்கள். அறிப்பாளர் அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
"மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, "இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது" என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
 
(சத்தியமார்க்கம் இணையதளத்தில்இருந்து )


Saturday 27 August, 2011

பெருநாள் தொழுகை

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள்

தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ 986

தொழுகைக்கு முன் சாப்பிடுதல்
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953

நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426

முன் பின் சுன்னத்துகள் இல்லை
இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616

பாங்கு இகாமத் இல்லை
இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்: முஸ்லிம் 1610

மிம்பர் இல்லை
வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன் செய்தபோது.
“மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…” என்று இடம் பெற்றுள்ளது.
ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1278

தக்பீரும் பிரார்த்தனையும்
இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615

அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)

Thanks: TNTJ



Wednesday 10 August, 2011

பொக்கிஷங்கள்


1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

நன்றி:பொக்கிஷங்கள்.காம்





தரமான கல்வி எல்லோருக்கும்

தமிழகத்தில் அனைவருக்கும் பொதுவான பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக, 2006-ம் ஆண்டு முதலாகத் தொடர்ந்து குரல் கொடுத்தது மற்றும் வழக்குத் தொடுத்ததில் பொதுவுடைமைக் கருத்துச் சார்புள்ள அறிவுஜீவிகளுக்கும், சில கல்வியாளர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இவர்களது கோரிக்கை தி.மு.க. அரசால் ஏற்கப்பட்டு, 2010-ல்தான் தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி அளவில் ஒரு வகுப்புக்கு மட்டும் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது.

இதுநாள்வரை, சமச்சீர் கல்விக்காகக் குரல் கொடுத்த இவர்கள், தற்போது தங்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தால் அது தவறு. இப்போதுதான் அவர்கள் களத்தில் நின்று காணவும், குரல்கொடுக்கவும் வேண்டிய உண்மையான தேவை மேலதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முழுமையாக அமலுக்கு வந்துள்ளதன் மூலம் மாநில கல்விச் சூழலில் இரண்டு வகையான புதிய நிலைமைகள் இயல்பாக உருவெடுத்துள்ளன.
முதலாவதாக, அனைத்துப் பள்ளிகளும் (சுமார் 45,000 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுமார் 11,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், 25 ஓரியண்டல் பள்ளிகள், 50 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும்) ஒரே பாடத்திட்ட முறைமைக்கு மாறிவிடுவதால், பயிற்றுமொழியைக் கொண்டு, "தமிழ்வழிப் பள்ளிகள்', "தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகள்' என்ற இரு வகையாக மட்டுமே அவற்றை அடையாளப்படுத்த முடியும். ÷அதேபோன்று, பயிற்றுமொழி மட்டும்தான் வேறு, பாடத்திட்டம் ஒன்றே என்பதால், கல்விக் கட்டணம்கூட, தமிழ்வழிப் பள்ளிகளுக்கானவை, ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கானவை என்று இரு விதமாக அமைக்கப்பட ஏதுவான நிலைமை உருவாகியுள்ளது.
இரண்டாவதாக, மெட்ரிகுலேஷன் என்பதற்கு வணிக பலம் இல்லாமல் போனதால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறவும், அதுதான் சிறந்த கல்வி என்கிற தோற்றத்தை உருவாக்கவும் தனியார் பள்ளிகள் முயலும். சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாறுவதற்கும், புதிதாக இன்டர்நேஷனல் பள்ளிகளைத் தொடங்கவும் முயலும்.
வசதிபடைத்தவர்கள் தங்களது குழந்தைகளை அதிகமான கட்டணத்தில் வசதியான பள்ளியில் படிக்க அனுப்புவதை யாரும் குறை சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம். உரிமையும்கூட. ஆனால், ஓர் ஏழைக் குழந்தைக்கும் அதே தரத்திலான பாடத்திட்டம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கருத்து. அதுதான் ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கடமையும்கூட. அதற்கேற்ப சமச்சீர் பாடத்திட்டத்தையும், குறைகள் இருப்பின் நீக்கிச் சரி செய்ய வேண்டும் என்பதுடன் கற்பித்தலில் ஆசிரியர்களைப் பொறுப்பேற்கச் செய்வதும் மிகவும் அவசியமாக இருக்கிறது.
ஏனெனில், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற அரசாணை காரணமாக, எந்தவித நிபந்தனையும் கட்டுப்பாடும் இல்லாமல், வகுப்புக்கே வராத மாணவர்களையும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் நிலைமை - குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது. வகுப்புக்கே வராத "ஆல் பாஸ்' மாணவர்கள் 9-ம் வகுப்புக்கு வரும்போது, தமிழைக்கூட படிக்கத் தெரியாதவர்களாக வருகிறார்கள். இவர்களையும் எப்படியோ 10-ம் வகுப்புக்குத் தள்ளிவிடும் வேலையையும் ஆசிரியர்கள் செய்துவிடுகிறார்கள்.
மாணவர் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியர் பணியிடங்கள் குறையும்; இடமாற்றம் நேரிடும் என்பதற்காக, பள்ளிக்கே வராத மாணவர்களையும் வருகைப் பதிவேட்டில் தொடர்ந்து வைத்திருந்து பாஸ் போடுவதும், பாடங்களை நடத்தாமல் இருப்பதும் ஊரகப் பள்ளிகளில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கற்பித்தலுக்குப் பொறுப்பேற்கச் செய்யாமல் பாடத் திட்டங்களை சி.பி.எஸ்.இ.க்கு இணையானதாக, தரமானதாக, சமச்சீராக அளித்தாலும், ஏமாற்றத்துக்கு ஆளாவது ஏழைக் குழந்தைகள்தான்.
பள்ளிகளில் மாணவர்களை மதிப்பீடு செய்வதைப் போல, ஆசிரியர்களின் கற்பித்தலையும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. தற்போது சமச்சீர் கல்வியால் ஒரே பாடத்திட்டம் என்பதால், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, அந்தந்தக் கல்வி மாவட்ட அளவில், பொது வினாத்தாள் மூலம் (ஒரே வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் கேள்விகள் இருக்கும் வகையில் தயாரித்து) தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வேறு பள்ளிகளில் கொடுத்து திருத்திப்பெற்று, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை உருவானால் மட்டுமே, மக்கள் நம்பிக்கையுடன் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்.
கற்பித்தல் குறைபாடுகளைக் களையவும், களைய முடியாத நிலையில் அத்தகைய ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் அதிகாரமுள்ள அமைப்பாக பெற்றோர்-ஆசிரியர்- அமைப்போ அல்லது ஏதாவது ஒரு பாரபட்சமற்ற கண்காணிப்பு அமைப்போ செயல்படுவதுதான் இதற்கு ஒரே வழி.
செல்வந்தர் வீட்டுப் பிள்ளைக்குத் தனியார் பள்ளியில் கிடைக்கும் அதே கல்வி, சாதாரண ஏழைக்கும் கிடைக்கச் செய்யும் ஒரே விதமான பாடத்திட்டத்துக்குப் பெயர்தான் சமச்சீர் கல்வியே தவிர, தரம் குறைந்த கல்வித்திட்டமல்ல. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற வகையில், அடித்தட்டு மக்களுக்கும் சர்வதேச அளவிலான தரமான கல்வியை அரசு வழங்குவதுடன், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், தகுந்த ஆசிரியர்களையும் உறுதிப்படுத்துவதன் மூலம்தான் சமச்சீர் கல்வி என்பது உறுதிப்படுத்தப்படும். தனியார் பள்ளியில் கற்பித்தலுக்கு ஆசிரியரைப் பொறுப்பேற்கச் செய்யும்போது, அரசுப் பள்ளிகளில் மட்டும் ஏன் தயக்கம்? இந்தத் தயக்கம்தானே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தயங்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

சமச்சீர் கல்வி அவசியம். அதே நேரத்தில், கற்பித்தலில் சமநிலையை உறுதிப்படுத்துவதும் மிகமிக அவசியம்.

Sunday 7 August, 2011

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)

மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

லைலதுல் கத்ர் 27வது இரவா?
லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத
பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.


லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)

இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.
ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021
இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022

இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)
அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.




Friday 29 July, 2011

புறம் பேசுவது பெரும்பாவமாகும்


புறம் பேசுவதன் விபரீதங்கள்!
மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.

புறம் என்றால் என்ன?
புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

புறம் பேசுவது பெரும்பாவமாகும்!
புறம் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜக்காத் இதர நல்லமல்கள் ஒன்றுமே இதற்கு ஈடாகாது! ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம்பேசுவதே ஆகும். உதாரணமாக, குள்ளன், நெட்டையன், குருடன், செவிடன் போன்ற உடல் சார்ந்த அனைத்துமே இதில் அடங்கும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது, அவன் பித்அத்வாதி என்றோ அல்லது தொழாதவன் என்றோ குறிப்பிடுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும்’ என்று கூறினார்கள். இவ்வாறு ஒருவரது குறையை மற்றவர்களிடத்தில் பேசுவது தான் புறம் பேசுதலாகும். அவ்வாறு பேசப்படுகின்ற குறைகள் குறிப்பிட்ட அந்த மனிதரிடம் இல்லையென்றால் அது அவனைப் பற்றிக் கூறிய அவதூறு / இட்டுக்கட்டாகும்.

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.

இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.

மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!
புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.

மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!
நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும், அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் இவ்வாரான வார்த்தைகள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் செல்லும். இதனால் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயத்தைக்கூட துளியும் அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் முன்வைக்கக் கூடிய அளவிற்கு ஆளாக நேரிடும். நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும்.

நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18)

என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.

நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது. இதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும். இதனால் நாம் மிகுந்த கவனமுடன் நடந்துக்கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்துக்கொள்ள வேண்டும்.

நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாகவே இருக்க வேண்டும். பிறரை புறம் பேசும் வார்த்தையாக இல்லாமல் இருக்கவேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேசவேண்டும். முடியாவிட்டால் மௌனமாக இருக்க முயலவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

Tuesday 28 June, 2011

கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்பர் அசோசியேசன் (KIWA) நடத்திய BEST STUDENT விருது வழங்கும் விழா

21-06-2011 செவ்வாயன்று பேட்டை முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாலை 7:00 மணியளவில் கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்பர் அசோசியேசன் (KIWA) நடத்திய BEST STUDENT விருது வழங்கும் விழா அல்லாஹுவின் பேரருளால் மிக சிறப்பாக நடைபெற்றது.
கடையநல்லூர் பள்ளிகளில் பத்தாம்வகுப்பு, பன்னிரெண்டாம்
வகுப்பு தேர்வுகளில் முதலிடத்தை பிடித்த மாணவ, மாணவியருக்கு பள்ளி முதல்வன் விருதும், மற்றும் நமதூரிலேயே  முதலிடத்தை பிடித்த மாணவ, மாணவியருக்கு KIWA BEST STUDENT விருதுகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு A.அப்துல் லதீப், ஆணையாளர் கடையநல்லூர் நகராட்சி. R. ஜெயராம், காவல்துரை ஆய்வாளர் கடையநல்லூர் மற்றும் V.S அப்துல் ரசாக், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, புளியங்குடி. இவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்விழாவிற்கு வரவேற்புரை  எம். திவான் மக்தூம் கிவா துணைச் செயலாளர், தலைமையுரை எஸ். நாகூர்மீரான் கிவா செயலாளர், நன்றியுரை திவான் (IYWA) மற்றும் சுலைமான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 
மேலும் இவ்விழாவினை சிறப்பிக்க பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளூர் கிவா நிர்வாகிகள் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.    

Monday 9 May, 2011

கடையநல்லூரில் +2 தேர்வில் ஹாரூன் ரசீத் முதலிடம்.

9-5-2011 கடையநல்லூர்: +2 தேர்வில் 1158 மதிப்பெண்கள் எடுத்து ஹாரூன் ரசீத் முதலிடம்.


நடந்து முடிந்த +2 தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மசூது தைக்கா மேல்நிலை பள்ளியில் பயின்ற ரஹ்மானியாபுரம் தெருவை சேர்ந்த மாணவர் ஹாரூன் ரசீத் 1158 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.

ரசீதின் மதிப்பெண் விபரம்.

Tamil:            181
English:          184
Physics:         199
Chemistry:     199
Mathematics: 197
Biology:         198
Total--------1158

தனது படிப்பிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் நன்றி தெருவித்ததோடு.தான் மருத்துவம் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்

கடையநல்லூரில் முதல் மதிப்பெண் பெற்ற ஹாரூனுக்கு நமது KIWA சார்பில் வாழ்த்துக்களை தெருவித்து கொள்கிறோம்.








Tuesday 3 May, 2011

உள்ளவன் சொல்வதெல்லாம் உண்மை

பாகிஸ்தானில் மறைவிடத்தில் வசித்துவந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க தனிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டது, அமெரிக்க அரசையும் அமெரிக்கர்களையும் மிகப்பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவிக் கிடப்பதால், இந்த வெற்றியை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டியிருக்கின்றன. தீவிரவாத அமைப்பான அல்காய்தா மீதான இந்த பலத்த அடி உலக அளவில் பரவிக் கிடக்கும் வெவ்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும், பிரம்படிபோல, வலியை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்புதான் காரணம்.
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகளைக் கொன்று குவித்த ஒரு தீவிரவாதியை இன்று கொன்றுவிட்டோம் என்று உலகுக்குச் செய்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தப் போர் முந்தைய அதிபர் கூறியதைப் போல இஸ்லாமியருக்கு எதிரான போர் அல்ல. இது இஸ்லாமியர்களையும் கொன்று தீர்த்தவனும் இஸ்லாமியர்களில் ஒருவனுமான தீவிரவாதிக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார்.
ஆனால், பின்லேடன் போன்ற ஒரு தீவிரவாதியை உருவாக்கியது அமெரிக்காவின் பணமும், அமெரிக்காவின் பேராசையும், ஆப்கனிஸ்தானில் அமெரிக்காவின் அத்துமீறலும்தான் என்பதையும் அவர் நினைவுகூர்ந்திருக்க வேண்டிய தருணம் இது. அமெரிக்காவால் உருவான தீவிரவாதம், அமெரிக்காவை மட்டுமல்ல, வளரும் நாடாகிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் பாதித்துள்ளது. புதிய தீவிரவாதிகளை அல்காய்தா வளர்த்தெடுக்கும் நிலையையும் உருவாக்கியது.
இன்று தங்களால் வளர்க்கப்பட்ட முன்னாள் நண்பனான இந்நாள் எதிரியை அமெரிக்கா வீழ்த்தி இருக்கிறது. அவர்கள் கொண்டாடுகிறார்கள். இதில் ஒன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசுக்கே பின்லேடனைக் கொன்று பழிதீர்க்க பத்து ஆண்டுகள் ஆனது என்றால், இந்தியா போன்ற வளரும் நாடுகளால் இந்தத் தீவிரவாதிகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பது நினைக்கவே வேதனை தருவதாக இருக்கிறது.
அமெரிக்காவுக்கு வலிமை இருக்கிறது, பணம் இருக்கிறது, ஆகையால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டவுடன் ஆப்கன் தேசத்துள் புகுந்து ஆட்சியை மாற்றிவிட்டு, தேடுதல் வேட்டையை நடத்த முடிகிறது. பாகிஸ்தானுக்கு ஆயிரமாயிரம் கோடி பணத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டு, அவர்கள் பின் லேடனை தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தும், புன்னகையுடன் உறவாடவும், மிரட்டவும் முடிகிறது. இல்லையென்றால், பாகிஸ்தானுக்குள், அமெரிக்கா ஒரு தனிப்படையுடன் நுழைந்து, பின்லேடனைச் சுட்டுக் கொன்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்ப முடியுமா?
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நபர்களைப் பெயரைக் குறிப்பிட்டு பிடித்துக் கொடுங்கள் என்று கேட்டாலே, இந்தியாவை உதாசீனப்படுத்தும் பாகிஸ்தான், இதுவரை தனது நாட்டுக்குள் அமெரிக்காவின் ஒரு சிறிய தனிப்படை உள்ளே வந்து பின்லேடனைச் சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றது பற்றி வாய்மூடி ஒரு வார்த்தை பேசாமல் மவுனியாக இருக்கிறதே, அதை என்னவென்று சொல்வது?
இதுகுறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தபோது, அந்த சிறிய தனிப்படை குறித்த கேள்விக்கு அவர்கள் அளித்த ஒரே பதில், இந்த நேரத்தில் அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்பதுதான். உங்கள் தாக்குதல் திட்டத்தை பாகிஸ்தானுக்குச் சொல்லிவிட்டு அங்கே போனால், பின்லேடனைத் தப்பிச்செல்ல விட்டுவிடுவார்கள் என்று கருதித்தான் நீங்கள் அவர்களிடம் சொல்லவில்லையா என்ற கேள்விக்கும் இந்த நேரத்தில் இதுபற்றி பேச வேண்டாம் என்பதுதான் அவர்களது பதில்.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் முகம் கிழிந்து அம்பலப்பட்டிருப்பது பாகிஸ்தான். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது என்ற குற்றச் சாட்டை ஆயிரம் முறை மறுத்த பாகிஸ்தான் இனி எந்த முகத்தோடு மற்ற நாடுகளுடன் பேசும்? எத்தனை பொய்கள், என்னென்ன கதைகள்! அத்தனையும் இன்று அம்பலமாகிவிட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, மிகப் பெரிய மாளிகையில் சகோதரர் மற்றும் தனது மனைவி உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர்களுடன் இருப்பதை இத்தனை காலமும் கண்காணித்து, அது பின்லேடன்தான் என்பதை உறுதி செய்து 40 நிமிடத்தில் கதையை முடித்த அமெரிக்கா,
அடுத்த நிமிடம் இந்தத் தகவலை, அமெரிக்க அதிபர் தனது முந்தைய அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரிடம்தான் சொல்கிறார். அவர்கள் தேசத்தை ஒன்றாகப் பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் அமெரிக்கா அயோக்கியத்தனம் செய்கிறது என்று சொன்னாலும், இந்த அரசியல் பலம்தான் அவர்களது வெற்றிக்கு அடிப்படையாக இருக்கிறது.
பாகிஸ்தான் சும்மா இருக்குமேயானால், இந்தியாவின் சிறியதொரு தனிப்படை அங்கே சென்று, மும்பைத் தாக்குதலில் 200 பேரைக் கொன்று குவித்தவர்களைப் பிடித்து, இந்தியாவுக்கு கொண்டுவரவும் முடியும். இந்திய ராணுவத்திடமும் புலனாய்வுப் பிரிவிடமும் அதற்கான திறமையும் இருக்கிறது. இந்தியாவுக்கு அரசியல் பலம்தான் இல்லை.

உள்ளவன் சொல்வதெல்லாம் உண்மையல்லாமல் என்ன, வென்றவன் சொல்வதெல்லாம் வேதமல்லாமல் என்ன, என்பார் கவியரசு கண்ணதாசன். உண்மை. அமெரிக்கா செய்தால் அது சாதுர்யம், சாகசம், நியாயம். இந்தியாவோ, வேறொரு நாடோ செய்தால், அது அந்நிய நாட்டுக்குள் நடத்தப்பட்ட அத்துமீறல். ஒரு பயங்கரத் தீவிரவாதி கொல்லப்பட்டான் என்று மகிழ்ச்சியும் அடையலாம். வல்லரசுகளின் அதிகாரபூர்வமான தீவிரவாதம் அங்கீகரிக்கப்படுகிறதே என்று வருத்தமும் படலாம். அது, அவரவர் பார்வையைப் பொருத்தது!

Thanks-Dinamani

Wednesday 13 April, 2011

வாக்காளர் கவனத்திற்கு..........

13-4-2011 இன்று 14-வது சட்டப்பேரவைக்கான வேட்பாளர்களைத் தமிழகம் தேர்ந்தெடுக்க இருக்கும் நாள். 234 சட்டப்பேரவைக்கான இடங்களுக்கு 2,748 பேர் களமிறங்கி இருக்கிறார்கள். போட்டியிடும் வேட்பாளர்களில் 136 பேர்தான் பெண்கள் என்பது வருத்தத்தையும், 240 பேர் அதிகாரப்பூர்வமாகத் தங்களைக் கோடீஸ்வரர்கள் என்று அறிவித்துக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியையும் அளிக்கிறது.
பணக்காரர்கள் தேர்தலில் போட்டிபோடக் கூடாதா, கோடீஸ்வரர்கள் களமிறங்கக் கூடாதா என்று கேட்கலாம். ஒன்றிரண்டு பேர் களமிறங்கினால் பரவாயில்லை. அதிக அளவில் களமிறங்கி இருக்கிறார்களே, இவர்கள் வெயிலில் வியர்வை சிந்தி உழைக்கும் ஏழை விவசாயியை, தினக்கூலித் தொழிலாளியை, வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை இழுத்துப் பிடித்து அவஸ்தைப்படும் நடுத்தர வர்க்கத்தினரை, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களைப் பற்றிக் கவலைப்படுவார்களா, அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிப்பார்களா என்று யோசித்துப் பார்க்கும்போது, அதிர்ச்சியுடன் அச்சமுமல்லவா மேலோங்குகிறது.
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என்று எல்லா ஆறுகளும் மணல் கொள்ளையால் வறண்டு போய்க் கிடக்கின்றன. பல கிராமங்களிலும், நகரங்களிலும் குடிக்கத் தண்ணீர் கிடையாது. ஆனால், தமிழகம் முழுவதும் கோடீஸ்வர வேட்பாளர்களின் உபயத்தால் பணம் மட்டும் தண்ணீராகச் செலவழிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மொத்தமாகத் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் பணம் 53 கோடி ரூபாய் என்றால் அதில் வேட்பாளர்கள் விநியோகம் செய்ய இருந்த பணம் தமிழகத்தில் மட்டும் 41 கோடி ரூபாய். களமிறங்கி இருப்பவர்களில் பலர் கோடீஸ்வரர்களாயிற்றே, பிறகு பணம் புரளாமலா இருக்கும்?
பணம்தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்று சொன்னால், பிறகு மக்களாட்சி இருந்தால் என்ன இல்லாமல் போனால்தான் என்ன? கோடீஸ்வரர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், சுதந்திரத்துக்கு முன்பு இருந்ததுபோல பணக்காரர்களுக்கும், வருமானவரி செலுத்துபவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாமே...
அரசியல் கட்சிகள் கொள்கையற்றவையாகி விட்டன. சாதனை என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ஐந்து ஆண்டுகளில் காவிரிப் பிரச்னை தீரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவில்லை, மின்வெட்டுத் தொடர்கிறது, நெசவாளர்கள் நலிந்துபோய்க் கிடக்கிறார்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது, சிறு தொழில்கள் நலிந்து வருகின்றன, விவசாயிகளின் நிலைமை அதைவிடப் பரிதாபம். இந்த நிலையில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்குக் கேட்பது?
மக்களாட்சி முறை வாக்குச் சீட்டின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்குகிறது. நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நல்லாட்சி. இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அந்த ஆட்சியைத் தூக்கி எறிந்து மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு என்பதுதான் மக்களாட்சி முறையின் சிறப்பு.
நல்லவர்கள் யாரும் போட்டி போடவில்லையே, களத்தில் இருக்கும் இரண்டு பேருமே நல்லவர்கள் இல்லையே, இதற்கு அது மாற்று, அதற்கு இது மாற்று என்று நாங்கள் வாக்களித்து ஓய்ந்ததுதானே மிச்சம்... என்று 13 சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் வாக்களித்து ஏமாந்து சலித்தபடி 14வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது.

நல்ல தலைவர்களை உருவாக்குவதும், நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதும், நல்லவர்களுக்குத்தான் வாக்களிப்பது என்று தீர்மானிப்பதும் வாக்காளர்களின் கையில்தானே இருக்கிறது? தோல்வி அடைவார் என்று கருதப்படும் நல்லவர், வல்லவராக இல்லாவிட்டாலும் வெற்றியடையச் செய்யும் சக்தி உங்களது வாக்குச் சீட்டுக்கு உண்டே, அதை ஏன் மறந்துவிடுகிறீர்கள்?

மாற்றி மாற்றி வாக்களித்து எதைக் கண்டோம் என்று சலிப்படையத் தேவையில்லை. தேர்தல் என்பது மத்தால் தயிர் கடைவதற்கு ஒப்பானது. மத்தால் தயிர் கடையும்போது இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக மாற்றி மாற்றி கயிற்றை இழுத்துக்கொண்டே இருந்தால், உள்ளே ஒளிந்துகொண்டு இருக்கும் வெண்ணெய் திரண்டு வருவதுபோல, தேர்தலுக்குத் தேர்தல் கட்சிகளுக்கு மாற்றி மாற்றி வாக்களித்தாலும், மக்களாட்சி முறை தோல்வி அடைந்துவிடாமல் பார்த்துக் கொண்டால், நல்லதொரு தலைமை, நல்லதொரு மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இன்றைய தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பணத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தேர்தல் வெற்றியை நிர்ணயித்துக் கொள்ள முடியும் என்கிற அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் நம்பிக்கையைத் தகர்க்க முடியும். அடுத்த தேர்தலில், எந்த வேட்பாளரும் பணத்தை வாரி இறைத்து ஏமாற மாட்டார்கள்.

வாக்களிக்கத் தவறாதீர்கள். எனது வாக்கு விற்பனைக்கல்ல என்பதையும், வாக்குச் சீட்டின் வலிமையால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற உண்மையையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. இந்த வாய்ப்பைத் தயவுசெய்து தவறவிட்டு விடாதீர்கள்!

Wednesday 6 April, 2011

படித்தால் மட்டுமே போதுமா?

இளநிலை மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள், மருத்துவத் தொழில் செய்வதற்கான உரிமம் பெற தனியாக ஒரு தேர்வு எழுத வேண்டும் என்று இந்திய மருத்துவக் குழுமம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே, சட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் வழக்குரைஞர் தொழில் செய்வதற்குத் தகுதி பெற, அகில இந்திய அளவிலான பார் கவுன்சில் தேர்வை எழுத வேண்டும் என்று சென்ற ஆண்டு அறிவித்தது. அதே வழித்தடத்தில் இந்திய மருத்துவக் கழகமும் அறிவித்துள்ளது.

சட்டப் படிப்பைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய தகுதித் தேர்வு சென்னையில் நடைபெறவில்லை. சட்டக் கல்வியை முடித்த மாணவர்கள் பெருந்திரளாகப் போராட்டம் நடத்தியதால் இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது, மருத்துவக் குழுமமும் இதேபோன்று தகுதித் தேர்வு நடத்தவுள்ளதாக அறிவிப்பு வந்த நிலையிலேயே சில மருத்துவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இன்னும் நிறைய எதிர்ப்புகள் வரக்கூடும்.
இந்த நடைமுறையை எதிர்ப்பவர்கள் எழுப்பும் ஒரே கேள்வி, "சுமார் 5 ஆண்டுகளாகப் படித்து, தேர்வு எழுதி, தேர்ச்சியுற்று பட்டம் வாங்கிய பிறகு இன்னொரு தகுதித் தேர்வு என்பது, ஐந்து ஆண்டுகள் படித்த படிப்பையே கேலி செய்வதுபோல இருக்கிறது. மீண்டும் ஒரு தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றால், அந்த மாணவர் இதுவரை படித்த படிப்புக்கு என்ன அர்த்தம்?' இது நியாயமான கேள்விதான்.
இவ்வளவு எளிமையான, நியாயமான கேள்வியை அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் இந்திய மருத்துவக் குழுமம் அறிந்திருக்காதா? அல்லது அரசுக்கு இதுபற்றிய அக்கறையே கிடையாதா என்று கேட்டால், அவர்களும் சில காரணங்களைச் சொல்கிறார்கள்.
இந்தியா முழுவதிலும் தனியாரால் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு எந்த அளவுக்கு நோயாளிகள் வருகிறார்கள், எந்த முறையில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதெல்லாம் வெறும் காகிதத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாமே தவிர, இவற்றின் தரம் குறித்து பல கருத்து மாறுபாடுகள் உள்ளன.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி இவற்றில் படிப்பை முடித்து வெளிவரும் எல்லா மாணவர்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. ஆகவே, ஓர் அளவுகோல் அவசியமாகிறது. அதற்காகத்தான் தகுதித் தேர்வு நடத்துவதும் அவசியமாகிறது.
ஒரு மருத்துவருக்கான தொழில் உரிமம் என்று மட்டுமே இதை அணுக முடியாது; கூடாது. இது அப்பாவி நோயாளிகளின் உயிருடன் தொடர்புடையது என்பதால் மருத்துவர்களின் தரம் மிகவும் இன்றியமையாதது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், மருத்துவத் தொழில் உரிமம்பெற வேண்டுமென்றால் அதற்கான தனித்தேர்வு எழுத வேண்டும். இந்தியாவிலிருந்து ரஷியா போன்ற வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இங்கே தொழில்புரிய வரும் மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் அவர்களுக்கான சிறப்புத் தேர்வு எழுதியாக வேண்டும். அவர்களும் சுமார் 7 ஆண்டு படித்துவிட்டுத்தானே வருகின்றனர். அவர்களை அப்படியே ஏன் மருத்துவராகத் தொழில்புரிய அனுமதிப்பதில்லை! ரஷியாவில் மருத்துவப்படிப்பு உலகத்தரத்தில் இல்லை என்பதால்தானே!
இந்திய மருத்துவக் குழுமத்தின் இந்த வாதம், எதிர்ப்பாளர்களின் வாதத்தைவிட ஆழமானதாகவும், அவசியமானதாகவும் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இன்றைய சூழ்நிலையில், மருத்துவக் கல்வி என்பது அதிக பணம் கொழிக்கும் தொழில் என்பதாகத்தான் இருக்கிறது. வசதி படைத்தவர்களும், ஏற்கெனவே மருத்துவர்களாக இருப்பவர்களும் தங்கள் குழந்தைகளை மருத்துவர்களாக்கி தங்கள் கார்ப்பரேட் மருத்துவமனையை நிர்வகிக்கச் செய்வதில் ஆர்வம் காட்டுவது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது.
இவர்கள் எத்தனை லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தாகிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கி, தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே ஆர்வத்துடன் படிக்கின்றார்களா? அல்லது தேர்வுகளில் வெற்றி பெறும் உத்திகள் மட்டுமே அறிந்திருக்கிறார்களா என்பது அந்தந்தக் கல்லூரிகளின் தரத்தைப் பொறுத்தது. இந்நிலையில் அவர்கள் படிப்பை முடித்தவுடன் மருத்துவர்கள் என்ற அங்கீகாரத்துடன் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்குவது அந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக அல்லவா முடியும்?
அவர் உண்மையாகவே மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றுள்ளாரா, நோயாளியுடன் அவரது அணுகுமுறை எவ்வாறு உள்ளது என்பதைச் சிறு தேர்வு மூலம் சோதித்து அவருக்கு உரிமம் வழங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?
படிப்பும், பட்டமும் மட்டுமே ஒருவர் ஒரு தொழிலில் முழுமையான திறமையுடையவருக்கான தகுதியாக இருக்க முடியாது. படித்துப் பட்டம் பெறும் எல்லா மருத்துவர்களுமே நூறு விழுக்காடு மதிப்பெண் பெற்று வெற்றிபெற்றவர்களா, என்ன? நமது புராதன இந்திய மருத்துவ முறையில் பல ஆண்டுகள் தேர்ந்த வைத்தியரிடம் உதவியாளராக இருந்தவர் மட்டுமே தனியாக வைத்தியம் செய்யும் தகுதியைப் பெறுவதாக இருந்தது. இப்போது ஏட்டுப் படிப்புப் படித்தாலே போதும் என்கிற நிலையில், மருத்துவம் படித்தவர்கள், குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளாவது மருத்துவப் பயிற்சிபெற்ற பிறகு, அவர்கள் தரம் தேர்வு மூலம் பரிசோதிக்கப்பட்டு உரிமம் வழங்குவதுதான் முறையாக இருக்க முடியும்.
மருத்துவர்கள் இவ்வாறு தகுதித் தேர்வில் வெற்றிபெறுவது மட்டுமல்லாமல், குறைந்தது கட்டாயமாக இரண்டாண்டுகளாவது கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினால் மட்டுமே மருத்துவர்களாக அவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர்கள் உயர்படிப்புக்கும் தகுதி பெற்றவர்களாக முடியும் என்கிற நிலைமை ஏற்பட வேண்டும். அரசியல் பின்புலமுடையவர்களால் புற்றீசல்போல தொடங்கப்பட்டு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து, நன்கொடை கொடுத்து மருத்துவர்களாகிவிட முடியும் என்கிற நிலைமையால் ஏற்படும் விபரீதங்களால் பாதிக்கப்படப்போவது அப்பாவி நோயாளிகள். அவர்களைப் பாதுகாப்பதுதான் அரசின் கடமையாக இருக்க முடியும்!

Monday 4 April, 2011

தேர்தல் ஆணையம்

கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வெளிப்படுத்தும் கருத்துகள் திகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. பொறுப்பான பதவியில் இருப்பவர், அரை நூற்றாண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர், தமிழகத்தில் மிக அதிகமான காலம் முதல்வராக இருந்தவர், நிர்வாகம் நன்றாகத் தெரிந்தவர் பேசுகிற பேச்சாக அது இல்லை என்பதுதான் திகைப்புக்கும், அதிர்ச்சிக்கும் காரணம்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற சூழல் நிலவுவதாகவும், தமிழகத்தை ஆட்சி செய்வது தனது தலைமையிலான தி.மு.க.தானா இல்லை வேறு யாராவதா என்று தெரியவில்லை என்றும் முதல்வர் பேசியிருப்பதுபோல வேறு யாராவது பேசி இருந்தால், "ஏன் இவர் இப்படியெல்லாம் உளறுகிறார்? இவருக்கு என்னவாயிற்று?' என்று கேட்கலாம். பேசியிருப்பவர் பல முறை முதல்வராக இருந்தவர். நிர்வாகம் தெரிந்தவர். ஆட்சியில் இருப்பவர்.
ஒரு மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதும், தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருப்பது அதிகாரம் இல்லாத வெறும் காபந்து அரசுதான் என்பதும்கூட, ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவருக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை.
""தமிழ்நாட்டை என் தலைமையிலான தி.மு.க. ஆண்டு கொண்டிருக்கிறதா அல்லது தேர்தல் ஆணையம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது'' என்று கூறிவிட்டு, ""தேர்தல் ஆணையத்திடம் மோதிக்கொள்ள விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சட்டப்படி எல்லாம் நடக்க வேண்டும். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை'' என்றும் கூறுகிறார். பிறகு, தேர்தல் ஆணையத்தின்மீது ஆத்திரத்தை உமிழ்வானேன்?
முன்பெல்லாம் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்குக் கெடுபிடிகள் செய்யவில்லை என்றால், அந்த அளவுக்கு விதிமுறை மீறல்களும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் நடக்காமல் இருந்ததுதான் காரணமே தவிர, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லாதது அல்ல காரணம். அரசியல் சட்டம் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவு 324(1) தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தலை முறையாக நடத்துவதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படுவது வரை பரவலான, முழுமையான அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அதைப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
முறையான தேர்தல் நடத்தப்பட முறையான அதிகாரிகள் தேவை. அன்றைய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் முறையாகத் தேர்தல் நடைபெற உதவ மாட்டார்கள் என்று ஆணையம் கருதினால் அவர்களை மாற்றவும், தனது நம்பிக்கைக்குரியவர்களை நியமிக்கவும் ஆணையத்துக்கு அரசியல் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் 13சிசி பிரிவுப்படி, தேர்தல் கால நடவடிக்கைகளுக்காகத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் அத்தனை அதிகாரிகளும், அரசு ஊழியர்களும், ஆணையத்துக்குத் தாற்காலிகமாக வழங்கப்பட்ட, ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட ஊழியர்கள்.
போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ போட்டியிட வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியாகப் போட்டியிடுவதை எப்படி ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தினக்கூலித் தொழிலாளியும், கோடீஸ்வரப் பிரபுவும் போட்டியிட வாய்ப்புள்ள தேர்தல் முறையில், பணத்தை விநியோகித்து ஒருவர் வாக்குச் சேகரிப்பதை ஆணையம் எப்படி அனுமதிக்க முடியும்?
முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தேர்தல் ஆணையம் விடியோ படமெடுக்கிறது. அப்படிப் படமெடுப்பவரைத் தடுப்பதும், தாக்குவதும் விவரம் இல்லாதவர்களாக இருந்தால் பரவாயில்லை. முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய மத்திய அமைச்சருடன் செல்பவர்கள் வட்டாட்சியரை மிரட்டுவதும், விடியோகிராபரைத் தாக்குவதுமாக இருந்தால், ஆணையம் கெடுபிடிகளை மேலும் அதிகரிப்பதில் என்ன தவறு?
மதுரை பாத்திமா கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் நல்ல சில கருத்துகளை மாணவர்களுக்குக் கூறுகிறார். ""நமது வாக்குகள் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி பெற்றவை. எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். அதேசமயம், அன்பளிப்பு இல்லாத வாக்குப் பதிவு அவசியம். லஞ்சமில்லாத வாக்களிப்பு குறித்து மாணவ மாணவியர் தங்களது பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் கைப்பேசி மூலம் "என்னுடைய வாக்கு விற்பனைக்கல்ல' எனும் வாசகத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று பேசுகிறார்.
மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார் தி.மு.க. அனுதாபி ஒருவர். வாகனங்களைச் சோதனையிடுகிறார்கள், எங்களது சுதந்திரம் தடைபடுகிறது என்று மற்றொருவர் வழக்குத் தொடுக்கிறார். மாவட்ட ஆட்சியர் என்னை மிரட்டுகிறார் என்கிறார் இன்னொருவர். மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்? என்று ஏன் யாரும் முதல்வரிடம் திருப்பிக் கேட்பதில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
காவல்துறை வாகனத்தில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸில் பணம் கடத்தப்படுகிறது. இதையெல்லாம் ஆணையம் தட்டிக் கேட்டால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக முதல்வர் எரிச்சலடைகிறார். வாக்குகள் விலைபேசப்படாமல், வாக்காளர்கள் கவர்ச்சி வாக்குறுதிகளால் ஏமாற்றப்படாமல், முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய முதல்வர், தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்படுவதை நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக வர்ணித்திருப்பது ஒருவகையில் நியாயம்தான்.

நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருப்பது உண்மை. அது யாருக்கு என்பதுதான் கேள்வி...!

Thanks:Dinamani 4-4-11